Tuesday, March 1, 2011

செல்வாவும் பாட்டுப்போட்டியும்


ஒரு முறை செல்வா ஒரு தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களும் அவர்களின் நிறைகுறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

அடுத்து செல்வாவின் முறை. செல்வாவும் தைரியமாக மேடையில் ஏறிப் பாடத்துவங்கினார். செல்வா பாட்டை முடிப்பதற்குள் நடுவர்களில் ஒருவர் போதும் நிறுத்துங்க என்று கூச்சலிட்டார். மேலும் " என்ன பண்ணுறீங்க ? " என்றார் கோபமாக.

" பாட்டுத்தான் பாடுறேங்க ?! "

" இதுக்குப் பேரு பாட்டா ? ஸ்ருதி , டெம்ப்போ , பிட்ச் எதுவுமே வரல , எதுக்கு நீங்க எல்லாம் பாடனும்னு விரும்புறீங்க ? " என்றார்.

" சாரி மேடம் , பிரிப்பர் பண்ணாம வந்திட்டேன் , ஒரு மணிநேரம் கழிச்சு பாடலாமா. ? " என்றார்.

நடுவர்களும் ஒப்புக்கொள்ள செல்வா மேடையிலிருந்து கிளம்பினார்.

சரியாக ஒரு மணிநேரத்திற்குப் பிறகு செல்வா மேடைக்கு வந்தார். கூடவே ஒரு பெண்ணும் வந்தார். 

செல்வாவைப் பார்த்த நடுவர் , " இது ஒருத்தர் மட்டுமே பாடுற போட்டி , எதுக்கு ரண்டு பேரு வந்திருக்கீங்க ? "

" மேடம் இவுங்க பேரு ஸ்ருதி , நீங்க தானே கொஞ்ச நேரம் முன்னாடி ஸ்ருதி வரலைன்னு சொன்னீங்க., அதான் கூட்டிட்டு வந்தேன். "

நடுவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு செல்வாவை கோபத்துடன் பார்த்தனர்.

அவர்களின் கோபத்தைப் புரிந்து கொண்ட செல்வா " டெம்போ வரலைன்னு கோபப்படுறாங்க போல " என்று தனக்குள்ள பேசிக்கொண்டு , " மேடம் , டெம்போ வெளிய நிக்குது., அப்புறம் பிட்ச் கேட்டீங்க , நேரு ஸ்டேடியம கேட்டிருக்கேன், நல்ல வேலைக்கு முடிஞ்சதும் சைக்கிள்ள கட்டியாவது இழுத்துட்டு வந்திடுவேன் " என்றார் பெருமை பொங்க.

இதைப் பார்த்த நடுவர்களில் ஒருவர் " இனிமேல் சத்தியமா எந்த போட்டிக்கும் நடுவரா போகவே மாட்டேன் " என்று சத்தியம் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் மனதிற்குள் நினைத்துகொண்டார் தன்னைத் தேர்வு செய்யும் அளவிற்கு அவருக்கு திறமை பத்தாது போலும் என்று! ஆனால் அவரைப் பாடுவதற்கு அந்தத் தொலைக்காட்சி நிலையம் இன்றுவரை அனுமதிக்கவில்லை என்பது சற்றே வேதனையான செய்தி!!

No comments: