Friday, May 27, 2011

பாட்டியின் இறப்பு!


அன்று செல்வா மிகவும் சோகமாக இருந்தார். மேலும் அழுதுகொண்டே இருந்தார்.

செல்வாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துகொண்டிருந்தனர்! செல்வா இப்படி உடைந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த அவரது உறவினர் ஒருவர் செல்வாவைத் தேற்றிக்கொண்டிருந்தார்.

" அழாத செல்வா , பாட்டிக்கு வயசாய்டுட்சுல அதான் இறந்திட்டாங்க! உனக்கும் ஒருநாள் வயசாச்சுனா நீயும் சாகலாம் இரு! " என்று கல்யாணத்திற்கு வாழ்த்துவது போல ஆறுதல் கூறினார். உண்மையில் அவரும் செல்வா போன்ற அறிவாளியாக (?!) இருந்திருக்க வேண்டும். ஆனால் செல்வா தரப்போகும் அதிர்ச்சி அவருக்கு இப்பொழுது தெரியாது.

சிறிது நேரம் செல்வாவைத் தேற்றிக்கொண்டிருந்த அவரது உறவினர் அப்பொழுது கண்ட காட்சியால் மயங்கிவிழும் அளவிற்கு அதிர்ச்சியுற்றார்.

இறந்துவிட்டதாக சொன்ன செல்வாவின் பாட்டி நல்ல ஆரோக்யத்துடன் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த செல்வா

" இந்தப் பாட்டிதான் இறந்திட்டாங்க ! " என்றார்.

அவரது உறவினருக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை. இது வழக்கம்போல அறிவாளி(?!) செல்வாவின் முட்டாள்தனங்களில் ஒன்றாக இருக்கும் என்று எண்ணியவர் , செல்வாவிடம்

" என்னடா ,செத்துட்டாங்கன்னு சொல்லுற, இப்ப உயிரோட வராங்க! "என்றார்.

" அவுங்க இப்ப சாகல, இன்னும் பத்து வருஷம் கழிச்சு செத்திட்டாங்க! அதான் அழுறேன்!" என்றார் செல்வா.

செல்வாவின் உறவினருக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை. " பத்து வருஷம் கழிச்சு செத்துப் போவாங்கன்னு இப்ப எதுக்கு அழுகுற? "

" நேத்திக்கு பக்கத்து வீட்டுல ஒருத்தர் செத்ததுக்காக கூரை மேல சோறு போட்டாங்களா  அத பாத்த எங்க அப்பா " உயிரோட இருக்கும்போது சோறு போடலை , இப்போ போடுராணுக பாரு ! " அப்படின்னு திட்டினாரு. எங்க பாட்டி செத்த பின்னாடி அழுதா அவுங்களுக்குத் தெரியாதுல , அதான் உயிரோட இருக்கும்போதே அழுதிடலாம்னு அழுறேன்! " என்றார் செல்வா அழுதுகொண்டே.

அப்பொழுது உள்ளே வந்த அவரது தந்தையைப் பார்த்த உறவினர் " அவுங்க கூரை மேல சோறு போடுறாங்கனா அது அவுங்க நம்பிக்கை , அத ஏன் கிண்டல் பண்ணுறீங்க ? இப்ப பாருங்க இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்னு! " என்று கூறிவிட்டு கிளம்பளானார்.

Thursday, May 26, 2011

அறிவாளிகள் அழிவதில்லை!


செல்வாவும் அவரது நண்பரும் ஒரே ஊரில் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.

இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்ததால் இவர்களே சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.

ஒருநாள் செல்வா சமையலை முடித்துவிட்டு அவரது நண்பரை சாப்பிட அழைத்தார். செல்வா வைத்திருந்த குழம்பு நுரைதள்ளி வெண்மையாகக் காட்சியளித்தது.

" டேய் , என்னடா இது ? இப்படி பொங்கிப்போய் கிடக்குது!" என்றார் நண்பர்.

" அது உப்பு தீர்ந்து போச்சா , அதான் டூத் பேஸ்ட்ட எடுத்து போட்டுட்டேன்! " என்றார் செல்வா.

" டூத் பேஸ்ட்ட எதுக்கு எடுத்த அதுக்குள்ளே போட்ட ? " 

" நீதான சொன்ன , அதுல உப்பு இருக்குனு ! " என்றார் செல்வா சிரித்தவாறே.

" அடேய், அது பல்லு விளக்கறதுக்கு பயன்படுத்துறது ! ஏண்டா உயிரை எடுக்குறீங்க ? விளம்பரத்துலதான் இது போட்டு பல்லு விளக்கலைனா பல்லு போய்டும்னு சொல்லுறாங்க , நீ அத விட ! கொடுமைடா! " என்று அலுத்துக்கொண்டே குழம்பினை எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு வெளியில் சென்று சாப்பிட்டுகொள்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கு என்று விளம்பரத்தைப் பார்த்துதானே அப்படிசெய்தோம் என்று குழம்பிப்போனார்.

மாலையில் வீடுதிரும்பிய செல்வாவின் நண்பர் செல்வா சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்.

" ஏன்டா ? என்னாச்சு ? மறுபடியும் டூத்பேஸ்ட்ல எதாச்சும் பண்ணி வச்சிருக்கியா ? " என்றார் நக்கலாக.

" அதெல்லாம் இல்ல , உங்க மேனஜர் செய்யுற வேலைகள்ல பாதி நீ செஞ்சு தரதால உன்ன சீக்கிரமா ப்ரோமோசன் பண்ணினார்னு சொன்னீல , அதே மாதிரி நானும் எங்க ஓனர் கிட்ட அவரோட வேலை எதாச்சும் நான் பண்ணுறேன்னு கேட்டேன் , அதுக்கு திட்டி அனுப்பிட்டாங்க! " என்றார் சோகமாக.

" திட்டுற அளவுக்கு அப்படி என்ன கேட்ட ? "

" நான் வேணா கொஞ்ச நாளைக்கு MD யா இருக்கட்டுமான்னு கேட்டேன்! அதான் கண்டபடி திட்டினார் " என்றார் செல்வா.அழுதவாறு!

Tuesday, May 24, 2011

ஆவினன்குடி தரிசனம்!


செல்வாவின் வீட்டிற்கு ஜோதிடர் ஒருவர் வந்திருந்தார்.

செல்வாவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு " உங்க ஜாதகத்துல 12 ல ராகு இருக்குறது அவ்வளவு நல்லதில்லையே?! " என்றார்.

"அப்படின்னா அந்த 12 வது கட்டத்த அடிச்சு விட்டிருங்க , ராகு போய்டுவார்ல ?! " என்றார் செல்வா.

கோபம் வந்தாலும் அதனை மறைத்துக்கொண்டு " அப்படியெல்லாம் பண்ண முடியாது , நீங்க ஒரு தடவ பழனி மலை அடிவாரத்துல இருக்குற திருஆவினன்குடி கோயிலுக்குப் போயிட்டு வாங்க! உங்களுக்கு நல்லது! , வேற எதாச்சும் சந்தேகம் இருக்கா ? " என்று கேட்டார் சோதிடர்.

" இருக்கு , ஆனா உங்களுக்கு தெரியுமா இல்லியான்னு தெரியலையே ?! "

" சும்மா கேளுங்க , எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுறேன்! " 

" ஆடு ஏன் வெள்ளைக் கலர்லயும் , கருப்புக்கலர்லையும் மட்டும் குட்டி போடுது ? ஏன் பச்சை , சிவப்புக் கலர்ல குட்டி போடுறது இல்லை ?! " என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார் செல்வா. இந்தக் கேள்வியினை காதில் வாங்கிய சோதிடர் அவரது மூளைக்கு இந்தக்கேள்வி செல்வதற்குள் செல்வாவின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு செல்வா சோதிடர் சொன்னது போல பழனி திருஆவினன்குடி கோவிலுக்குச் செல்லலாம் என்று கிளம்பினார்.

பேருந்து நிலையத்தில் இறங்கிய செல்வா கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது கோவிலிலிருந்து ஒரு 200 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த பொழுது அங்கிருந்த தேங்காய் பழம் விற்கும் கடைக்காரர் ஒருவர் " உங்க செருப்ப இங்க விட்டுட்டுப் போங்க! காசு தரவேண்டாம்! " என்றார்.

செல்வாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நம்ம மேல அவ்ளோ மரியாதையா என்று நினைத்துக்கொண்டு  செருப்பினை அவரது கடையில் விட்டுவிட்டு கோவிலுக்குச் செல்ல முற்பட்டார். 

" சார், சாமிக்கு தேங்காய் பழம் வாங்கிட்டு போங்க! " என்றார் கடைக்காரர்.

செல்வா ஏற்கெனவே வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்ததால் வேண்டாமென்றார்.

" அப்படின்னா செருப்ப எடுத்துகோங்க , தேங்காய் பழம் வாங்கினா மட்டும்தான் நாங்க உங்க செருப்பப் பார்த்துக்குவோம்"  என்று கூறியதால் செல்வா தனது செருப்பினை போட்டுக்கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார்.

அடுத்த கடைக்காரரும் அதே போல அழித்து அங்கேயும் தேங்காய் பழம் வாங்க வேண்டும் என்று கூறியதால் மீண்டும் செருப்பினைப் போட்டுக்கொண்டு கோவில் வாசல் வரை சென்றுவிட்டார். 

அங்கு செருப்பினை விடுவதற்கு ஏதேனும் கடைகள் இருக்கின்றதா என்று சுற்றும் முற்றும் பார்த்தவர் எங்கும் கடைகள் இல்லாததால் கோவில் வாசலில் விட்டுவிட்டு கோவிலுக்குள் சென்றார்.

கோவிலுக்குள் சென்றவர் கோவிலின் கருவறையைச் சுற்றிவந்துவிட்டு நேராக முருகப்பெருமானைப் பார்த்து " என்னோட செருப்ப யாரும் எடுத்துட்டுப் போய்டக்கூடாது! " என்று வேண்டிவிட்டு வேகமாக கோவிலிலிருந்து வெளியில் வந்தார்! பழனி சென்று செருப்பினை யாரும் எடுத்துட்டுப் போய்டக்கூடாது என்று வேண்டியவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

பின்குறிப்பு : இந்தக் கதைல சோதிடர் சொன்னதா சொன்னது கற்பனை. ஆனா நான் பழனி கோவிலுக்குப் போனதும் அந்த தேங்காய் பழக்கடைக்காரர் கூப்பிட்டதும் உண்மை. ஆனா நான் வேண்டினது கற்பனை. ஏன்னா நான் என்ன வேண்டுவேன்னு உங்களுக்குத் தெரியும். நான் சீக்கிரமா RJ ஆகணும்கிறத  தவிர வேற என்ன வேண்டிக்கப்போறேன்?

Saturday, May 14, 2011

ராசிபலன்!


நாட்காட்டியில் தனது ராசிக்கான பலனைப் பார்த்தவுடன் இன்று வேலைக்குச் செல்வதில்லை என்ற முடிவிலிருந்தார் செல்வா!

இந்நேரத்துக்கேல்லாம் ரெடி ஆகிருப்பானே, எங்க ஆளக் காணோம் ?  என்று நினைத்தவாறு செல்வாவுடன் வேலை செய்யும் அவரது நண்பர் செல்வாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

" என்னடா இப்படி உட்கார்ந்திட்டு இருக்க ? வேலைக்கு வரலியா ? "

" இல்ல " என்றார் செல்வா.

" ஏன் , ஒடம்பு சரியில்லையா ? "

" அதெல்லாம் இல்ல , இன்னிக்கு என்னோட ராசிக்கு தீமைனு ராசிபலன் போட்டிருக்கு அதான் வேலைக்கு வந்தா ஏதாச்சும் ஆகிடும்னுதான் வரல! "

" ஏன்டா , காலண்டர்ல போட்டிருக்குற ராசிபலன கூடவா நம்புற  ? எனக்கு அதுல நம்பிக்கை இல்ல , நீ என்கூடவே வா , உனக்கு என்ன தீமை நடக்குதுன்னு பார்க்கறேன்!" என்று கிண்டலாகக் கூறினார் நண்பர்.

" போடா வெண்ண , ராசிபலன் உண்மை! தெரிஞ்சிக்க "

" அதெல்லாம் டுபாகூருடா , ஒழுங்கு மரியாதையா என்கூட வேலைக்கு வந்திடு ! "

சிறிது நேரம் வாதாடிப் பார்த்த செல்வா அவரது நண்பர் ராசிபலன் முழுவதும் பொய் என்றும் தான் நம்ப மாட்டேன் என்றும் கூறுவதைக் கேட்டு நண்பருடன் அலுவலகம் செல்ல முடிவு செய்தார். இருவரும் வேலைக்குக் கிளம்பினர். சிறிது தூரம் சென்றது செல்வா

" டேய் , பூனை குறுக்கால வருதுடா , இது கெட்ட சகுனம்  நான் வரல ! " என்று மறுபடியும் திரும்பி வீட்டிற்கே வந்துவிட்டார்.

தண்ணி குடிச்சா சகுனம் போய்டும் , அதனால தண்ணிகுடிச்சிட்டுத் போலாம் என்ற நண்பரின் ஆலோசனையை ஏற்று தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் வேலைக்குக் கிளம்பினர் இருவரும்.
மறுபடியும் சிறிது தூரத்தில் வெள்ளைப் புடவை உடுத்திய ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த செல்வா " டேய் , இதுவும் கெட்ட சகுனம்டா , இனி நீ என்ன சொன்னாலும் வர மாட்டேன் ! " என்று கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார்.

அவரது நண்பருக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் அவர் மட்டும் வேலைக்குச் சென்றார்.

மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய அவரது நண்பர் செல்வாவிடம் சென்று ராசிபலனைப் பற்றிக் கிண்டல் செய்யலாம் என்று செல்வாவின் வீட்டிற்கு வந்தார்.

" ஏன்டா , என்னமோ தீமைனு சொன்ன ? எதாச்சும் நடந்திச்சா ? " என்றார் நக்கலாக.

" ஆமாடா , காலண்டர்ல போட்டிருந்த மாதிரியே தீமை ஆகிப்போச்சு! " என்றார் சோகமாக.

நண்பருக்கு ஆச்சர்யம். " அப்படி என்னடா தீமை நடந்திச்சு ? "

" நம்ம குமாரு இருக்கான்ல , அவன் காலைல என்கிட்டே வந்து " ஏன்டா வேலைக்குப் போகலை " ன்னு கேட்டானா, நானும் ராசிபலன் பத்தி சொன்னேன்!" அதுக்கு அவன் " நீ எப்பத்தான் ஒழுங்கா வேலைக்குப் போயிருக்க? வேலைக்குப் போகாமா இருக்க இப்படி ஒரு சாக்கு ! " அப்படின்னு திட்டினான். எனக்கு செம கோவம் வந்திருச்சு. உடனே அவன் மூஞ்சியப் பாத்துக் குத்திட்டேன்! மூக்கெல்லாம் ரத்தமா ஒழுகுச்சு! நீ காலண்டர் ராசிபலன் பொய்னு சொன்ன , உண்மை ஆகிருச்சு பாரு! " என்றார் செல்வா.

" இதுல உனக்கு எங்க தீமை நடந்துச்சு ? , உனக்கு ஒரு தீமையும் இல்லைனா ராசிபலன் பொய்தானே!" என்றார் நண்பர் ஆவலாக.

" அதான் குமாருக்கு நடந்திசுல ! "

" குமாருக்கு நடக்குறதுக்கும் நீ சொன்னதுக்கும் என்ன சம்பந்தம் ? "

" லூசு, குமாருக்கும் எனக்கும் ஒரே ராசி! எனக்கு நடக்கலைனாலும் குமாருக்கு நடந்திச்சுல! " என்றார் செல்வா.

" அப்படின்னா காலண்டர்ல போட்டிருக்கறது யாரோ ஒருத்தருக்குத்தான் நடக்குமா ? அப்புறம் எதுக்கு அத நம்புற ? "

" ஹி ஹி " என்று பதில் சொல்லத்தெரியாமல் இளித்தார் செல்வா.

Tuesday, May 10, 2011

அறிவுக் கொழுந்து!

.
நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார் செல்வா.

செல்வாவின் பக்கத்து வீட்டுப் பெண் ( குழந்தை என்று சொல்லலாம் , இரண்டாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறாள் ) கையில் ஷாம்பூ பாக்கட்டுடன் வந்துகொண்டிருந்தாள்.

" சைக்கிள்ள போலாம்ல , ஏன் நடந்து போற ? " என்றார் செல்வா.

" சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா நான் ஏன் அண்ணா நடந்து போகப்போறேன் ? " என்றாள் அந்தச் சிறுமி.

" அட , எனக்கும் கூடத்தான் பஸ் ஓட்டத் தெரியாது , நான் பஸ்ல போகலையா என்ன ? "

செல்வாவின் இந்த நக்கலைக் கேட்டதும் கீழே இருந்த ஒரு கல்லைக் கையில் எடுத்தாள். சற்று பயந்த செல்வா " அட சும்மா லுளுலாய்க்கு சொன்னேன் , ஹி ஹி " என்று வழியலானார்.

அந்தச் சிறுமியும் செல்வாவை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் பேருந்திற்காகக் காத்திருந்த செல்வா சட்டென எதையோ மறந்தவராக " அடச்சே" என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வீட்டிற்கே சென்றார்.

வீட்டிற்குச் சென்றவர் வாடகைக்கு இரண்டு மினி ஆட்டோக்களை அழைத்தார். ஒரு ஆட்டோவின் மீது ஆளுயரக் கண்ணாடியை வைத்துவிட்டு இன்னொரு ஆட்டோவின் மீது ஏறி அமர்ந்துகொண்டார்.

வடிவேலு ஸ்டைலாக ஆட்டோவின் மீது அமர்ந்து எதிரிலுள்ள ஆட்டோவில் தனது உருவத்தைப் பார்த்தாவாறே பயணம் செய்தார்.

நண்பரின் வீடு வந்ததும் கீழே இறங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியையும் எடுத்து தனக்கு முன்னர் பிடித்தவாறு நண்பரின் வீட்டிற்குள் சென்றார்.

தனது உருவத்தைப் பார்த்தவாறே சென்றதால் எதிரில் என்ன இருக்கிறதென்பதைப் பார்க்கமுடியாமல் தவறிக் கீழே விழுந்தார்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த அவரது நண்பர் செல்வா கீழே விழுந்து கிடப்பதையும் , கண்ணாடி உடைந்து கிடப்பதையும் பார்த்தார்.

" என்ன எழவுடா இது ? " என்று திட்டியவாறே கீழே விழுந்துகிடந்த செல்வாவைத் தூக்கினார்!

" நீதான நேத்திக்கு எங்கிட்ட ஒடம்ப பார்த்துக்கனு சொன்ன, அதான் ஒடம்ப பார்க்கணும்னா கண்ணாடி வேணும்ல அதுக்குதான் வாங்கி ஆட்டோ வாடகைக்கு வச்சு ஒடம்ப பார்த்துட்டே வந்தேன். இங்கயும் கண்ணாடியே எடுத்து ஒடம்ப பார்த்துட்டே வந்தேனா திடீர்னு கீழ விழுந்திட்டேன்! " என்றார் செல்வா.

" நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ? எதையுமே அப்படியேதான் புரிஞ்சிக்குவியா ? என்ன சொல்லவராங்கன்னு புரிஞ்சிக்காம அப்புறம் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பழிபோடுறது! ஒடம்ப பார்த்துக்கறதுனா கண்ணாடில பாக்குறது இல்ல ! "

" அப்படின்னா வீடியோ எடுத்து அதுல பாக்கணுமா ? " அப்பாவியாகக் கேட்டார் செல்வா.

ஏதோ சொல்ல வாயைத் திறந்த அவரது நண்பர் கோபமாக முறைத்துவிட்டு செல்வாவின் காயங்களுக்கு மருந்து எடுக்கச் சென்றார்.

வாழ்த்து : நம்ம எல்லோரும் எப்படா இந்த பருவத்தைத் தாண்டுவோம் அப்படின்னு யோசிச்சிருப்போம் , ஆனா அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு இன்னும் மாணவனாவே இருக்கிற எங்கள் மாணவன் சிலம்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 

Wednesday, May 4, 2011

விளையும் பயிர்!


செல்வாவின் வீட்டில் கோழி ஒன்று அடைகாத்து வந்தது!

செல்வா ஏதேனும் ரகளை செய்துவிடுவார் என்று அஞ்சிய அவரது தாயார் செல்வாவிடம் எச்சரிக்கை செய்தார்.

செல்வா வழக்கம்போல தனது அறிவாளித்தனத்தை(?!) அரங்கேற்றி இருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு கோழி அடைகாத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து கெட்ட வாடை வருவதை உணர்ந்த அவரது தாயார் அது எதனால் வருகிறதென்று சோதித்தார்.

அடைகாக்க வைக்கப்பட்டிருந்த சில முட்டைகள் அவிக்கப்பட்டு , மசாலா பொடிகள் தூவப்பட்டு , எண்ணெயில் பொரிக்கபட்டிருந்தன!

செல்வாவின் தாயாருக்கு அதிர்ச்சி! யார் இப்படி செய்திருப்பார்கள் என்று அவர் நீண்ட நேரம் யோசிக்கவில்லை, செல்வாதான் இதை செய்திருப்பார் என்பதையும் ஊகித்தவர் செல்வாவிடம் விசாரித்தார்.

" எதுக்குடா முட்டைய அவிச்சு , மசாலா போட்டு வச்சிருக்க ? " என்றார் கோபமாக.

"எனக்கு எண்ணெய்ல பொரிச்ச கோழி வேணும் ,அதான் அப்படி பண்ணினேன்! "

" எண்ணெய்ல பொரிச்ச கோழி வேணும்னு , முட்டைய எதுக்கு அவிச்சு அடைல வச்சிருக்க ? "

" நீங்கதானே சொன்னீங்க பிற்காலத்துல  என்ன ஆகணுமோ அத சின்ன வயசுல இருந்தே பழக்கப்படுத்திக்கணும்னு , அதான் இப்பவே அத அவிச்சு வச்சிட்டா அது கோழியா வளர்ந்ததுக்கு அப்புறம் இன்னொரு தடவ அவிக்க வேண்டாம்ல , அப்படியே பிடிச்சி சாப்ட்றலாம்ல? அதான் அப்படி பண்ணினேன்! " என்று தனது நியாயத்தைக் கூறினார் செல்வா.

செல்வாவின் இந்தப் பதிலைக் கேட்ட அவரது தாயார் " நீ சொல்லுறதும் சரிதான் , இங்க பல பேர் இப்படித்தான் இருக்காங்க! அவுங்க பசங்க பெரிய படிப்பாளியா வரணும்னு பக்கத்து வீட்டுப் பசங்ககூட கம்பேர் பண்ணுறது ,  அவன் ரண்டு வயசுலேயே நூறு திருக்குறள் மனப்பாடம் பண்ணிருக்கான் உனக்கு ஒண்ணுமே தெரியாது, நீ எதுக்குமே லாயக்கு இல்ல  அப்படி இப்படின்னு திட்டவேண்டியது , அவனும் சின்ன வயசுல இருந்தே நாம எதுக்கும் ஆக மாட்டோம் போலன்னு நினைச்சு நினைச்சே வீணாப் போயிடறான்! " என்று கூறிவிட்டு செல்வாவிடம் அவித்த முட்டை குஞ்சு பொறிக்காது என்பதை விளக்கினார்.

Monday, May 2, 2011

அட்சய திருதியை!


அன்று செல்வா மிகவும் சோகமா இருந்தார்!

அப்பொழுது அங்கு வந்த அவரது நண்பர் செல்வா சோகமாக இருப்பதைப் பார்த்தார். செல்வா இவ்வளவு சோகமாக இருந்து அவர் இதுவரை பார்த்தே இல்லை.

" என்னடா ஆச்சு , கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்க ? " என்றார் அந்த நண்பர்.

" கப்பல் கவுந்தா எல்லோரும் ஒரே அடியா போய்ச் சேர்ந்திருவாங்க , அப்புறம் எங்க உட்காருறது ? " என்று அந்த சோகத்திலும் நண்பரின் தவறினைச் சுட்டிக்காட்டி தான் அறிவாளி(!?) என்பதை நினைவுறுத்தினார் செல்வா!

" ஒழுங்கா சொல்லுடா , ஏன் சோகமா இருக்க ? "

" அது ஒன்னும் இல்லை , இந்த வீட்ட விக்கப் போறேன்! அதான் அழுகை அழுகையா வருது" என்று தான் குடியிருந்த வீட்டினை விற்கப் போவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட அந்த நண்பருக்கு அதிர்ச்சி. ஏனென்றால் செல்வாவிற்கு வீட்டினை விற்கும் அளவு எந்தச் செலவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

" வீட்ட விக்குற அளவுக்கு உனக்கு அப்படி என்னடா செலவு ? " என்றார் நண்பர் சற்று அதிர்ச்சியாக.

" அது வந்து , போன வருஷம் அட்சய திருதியை வந்துச்சுல்ல , அப்போ நகை வாங்கினா செல்வம் பெருகும்னு சொன்னாங்க , அதான் அப்போ அதிக வட்டிக்குக் கடன் வாங்கி தங்கம் வாங்கினேன் , ஆனா செல்வம் பெருகவே இல்ல. இப்ப வட்டி ரொம்ப அதிகமா போய் நான் வாங்கின தங்கத்த வித்தா கூட பத்தாத அளவுக்கு வந்திடுச்சு, அதான் வீட்ட வித்துக் கடன அடைக்கப் போறேன்! " என்றார் செல்வா சோகமாக.

" அட பாவி , வீட்ட வித்து கடன அடைக்கணும்னா அதிகமா வாங்கிருப்ப போல ! கைல இருக்குற காசுக்கு தங்கம் வாங்கித் தொலைய வேண்டியதுதானே ?! "

" அப்போ எங்கிட்ட பணம் கொஞ்சமா தான் இருந்துச்சு , சரி கம்மியா தங்கம் வாங்கினா அந்த அளவுக்குத்தானே செல்வம் வளரும் , அதான் கொஞ்சம் அதிகமா வாங்கினா இன்னும் அதிகமா வளரும்ல , அதான் அரை கிலோ தங்கம் வாங்குற அளவுக்கு கடன் வாங்கினேன்! "

" உன்ன எல்லாம் திருத்தவே முடியாது , இனிமேலாச்சும் இந்த மாதிரி மூட நம்பிக்கைய நம்பாத ! "என்று அறிவுரை கூறினார் நண்பர்.

" எது மூட நம்பிக்கை , உண்மைல அட்சய திருதியை அன்னிக்கு எதாச்சும் பண்ணினா அது பெருகும் தெரிஞ்சிக்க ! " என்றார் செல்வா.

" நீ இன்னும் திருந்தலையா ? என்ன பெருகுச்சு உனக்கு ? "

" ஆமா , போன வருஷம் அட்சய திருதியை அன்னிக்கு கொஞ்சம் தான் கடன் வாங்கினேன் , இந்த வருஷம் இவ்ளோ கடன் ஆகிருச்சு பாரு ? " என்றார் செல்வா.

" கடன் எப்ப வாங்கினாலும் வளரும்! , இதப் போய் அட்சய திருதியை கூட கம்பேர் பண்ணி? , உன்னயெல்லாம் ?! " என்று செல்வாவை முறைத்தார் நண்பர்.

பின்குறிப்பு : அட்சய திருதியை உண்மையோ பொய்யோன்னு எனக்குத் தெரியாதுங்க. ஆனா இப்போ காதுல கேக்குற விளம்பரங்கள் எல்லாமே அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கலைனா போலீஸ் பிடிச்சிட்டுப் போயடும்கிற அளவுக்கு இருக்கு! அதனாலதான் இப்படி :-)