Saturday, December 24, 2011

வேண்டுதல்

செல்வா சுயதொழில் ஆரம்பித்திருந்த சமயம்.

தனது தொழில் சிறக்க என்னவெல்லாம் செய்யலாமோ, நண்பர்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறார்களோ அனைத்து அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் செய்துவந்தார்.

இப்படித்தான் ஒருமுறை உறவினர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் திட்டமலை முருகன் கோவிலை பௌர்ணமி நாளில் நூற்றியெட்டு முறை சுற்றி வந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று கூறியிருந்தார்.

அதை உண்மையென நம்பிய நமது செல்வா அதே போல ஒரு பௌர்ணமி நாளில் சுமார் 300 அல்லது 400 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மலையை நூற்றியெட்டுமுறை சுற்றிவந்தார்.

தனது தொழில் எப்படியாவது சிறப்பாக நடைபெற வேண்டுமென நினைத்ததால் அவருக்கு அந்த மலையைச் சுற்றுவது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

மலையைச் சுற்றி முடித்துவிட்டு கடவுளிடமும் வேண்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.

மறுநாள் செல்வாவைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்த நண்பர், செல்வா மொட்டைமாடியில் நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்.

ஒருவேளை மலையைச் சுற்றியதால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அழுகிறாரோ என்று நினைத்துக்கொண்டு ஏன் அழுகிறார் என்பதற்கான காரணத்தைக் கேட்டார்.

“ நான் நூத்தியெட்டுத் தடவ சுத்தி முடிச்சிட்டு கடைசியா முருகன்கிட்ட வேண்டிக்கும்போது என்ன வேண்டிக்கிறதுனு மறந்துட்டு ’ கணக்கு டீச்சர் என்னைத் திட்டவே கூடாதுனு’ வேண்டிக்கிட்டேன்” என்றார் சோகமாக.

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே செல்வாவிற்கு கணக்கு வராது என்பதால் கணக்கு ஆசிரியர்களைப் பார்த்தால் எப்பொழுதுமே பயம்தான்.

” அதனால என்ன, மறுபடி உன்னோட தொழில் நல்லா வரணும்னு வேண்டிக்க வேண்டியதுதானே ? “

“ இல்ல, மலைய சுத்தி வந்த உடனே முதல்ல என்ன வேண்டிக்கிறோமோ அதுதான் நடக்குமாமா! “ 

“அடடா, கொஞ்சம் கவனமா இருக்கவேண்டாமா? சரி விடு. இன்னொரு தடவ சுத்தி மறுபடி வேண்டிக்கலாம்!” என்று சமாதானப்படுத்தினார் நண்பர்.

சிறிது நேரம் அழுகையை நிறுத்திய செல்வா மீண்டும் அழத்தொடங்கினார்.

இப்பொழுது எதற்கு அழுகிறார் என்று குழம்பிய அவரது நண்பர் “ மறுபடி எதுக்கு அழுற ? கால் வலிக்குதா ? “ என்றார்.

“இல்ல, கணக்கு டீச்சர் திட்டக் கூடாதுனு வேண்டுனதுக்குப் பதிலா கணக்கு டீச்சர் அடிக்கக் கூடாதுனு வேண்டியிருக்கலாம். அதயும் மறந்துட்டேன்! “

செல்வாவின் நண்பர் கடுப்பாகிவிட்டார்.

“எரும, உனக்கு ஏழு கழுத வயசாகுதுல. இப்ப என்ன பள்ளிக்கூடத்துலயா படிச்சுட்டு இருக்க, கணக்கு டீச்சர் வந்து அடிக்கிறதுக்கு ? கணக்கு டீச்சர் அடிச்சா என்ன ? கொஞ்சினா உனக்கு என்ன ? “ என்று கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.

“ அதில்ல, என்னோட பொண்டாட்டியும் ஒரு கணக்கு டீச்சர் தான்! “ என்றார் செல்வா அழுதவாறே.

Thursday, December 22, 2011

சோப்பு


உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த செல்வா சோப்பு வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார். அங்கு தனக்கு வேண்டிய சோப்பின் பெயரைச் சொல்லி ஒன்று தருமாறு கேட்டார்.

கடைக்காரரும் ஒரு சோப்பினை எடுத்துக் கொடுத்துவிட்டுப் பனிரண்டு ரூபாய் தருமாறு கேட்டார்.

“ என்னது? இந்தச் சோப்பு பனிரண்டு ரூபாயா ? எங்க ஊருல எல்லாம் ஆறே ரூபாய்தான்! “ என்று பேரம்பேச நினைத்தார் செல்வா. 

வழக்கமாக எந்தப் பொருளையும் பேரம் பேசி வாங்க வேண்டும் என்று அவரது தந்தை அறிவுறுத்தியிருப்பதால் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அவர்கள் சொல்லும் விலையில் பாதி விலைக்குக் கேட்பது செல்வாவின் வழக்கம். அந்தப் பொருளை முன்னர் வாங்கியிருக்காவிட்டாலும் கூட!

“ ஆறு ரூபாய்க்கெல்லாம் இந்தச் சோப்பு வராது தம்பி, அப்படி எந்தக் கடைல ஆறு ரூபாய்க்கு விக்குறாங்கனு காட்டினா உனக்கு நூறு சோப்பு இலவசமா தரேன்! “ என்று கடைக்காரர் கேட்டதும் செல்வாவிற்கு மேலே என்ன சொல்லுவது என்று தெரியாமல் அசட்டுத் தனமாக ஒருமுறை சிரித்துவிட்டுச் சோப்பை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

பிறகு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கடைக்கு வந்து அதே சோப்பினை மீண்டும் வாங்கினார் செல்வா. அப்பொழுதும் தங்கள் ஊரில் ஆறு ரூபாய்க்கு அந்தச் சோப்பு விற்கப்படுவதாகக் கூறினார்.

இந்தமுறை கடைக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அவருக்கு அந்தச் சோப்பை மொத்தமாக விற்பவரே ஒரு சோப்பின் விலை பத்து ரூபாய்க்குத்தான் விற்கிறார். ஆறு ரூபாய்க்கு அந்தச் சோப்பினை யாராலும் விற்கவே முடியாது என்பதால் “ ஏன் தம்பி அடிக்கடி வந்து பொய் சொல்லுற ? “

“ இல்லீங்க, எங்க ஊருல சத்தியமா இந்தச் சோப்ப ஆறு ரூபாய்க்குத்தான் விக்குறாங்க! “

“ நீ சொல்லுறது மட்டும் உண்மையா இருந்துட்டா உனக்கு நூறு சோப்பு இலவசமா தரேன், அந்தக் கடையக் காட்டு!” என்று செல்வாவிடம் இந்த முறையும் அந்தக் கடைக்காரர் கேட்டார். செல்வாவும் அந்தக் கடையைக் காட்டுவதாக ஒப்புக் கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு தங்கள் ஊருக்குக் கிளம்பினார்.

செல்வாவின் ஊருக்கு வந்ததும் அந்தக் குறிப்பிட்ட கடைக்குச் சென்று அங்கே வாங்கிய அதே சோப்பினை வாங்குமாறு கடைக்காரரிடம் கூறினார் செல்வா.

கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட சோப்பின் பெயரைச் சொல்லி ஒன்றை வாங்கிக்கொண்டு அதன் விலையைக் கேட்டார். அதன் விலை ஆறு ரூபாய் என்றதும் கடைக்காரருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

பின்னர் ஊருக்குத் திரும்பி ஏற்கெனவே செல்வாவிடம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி நூறு சோப்புகளை இலவசமாகக் கொடுத்துவிட்டு, மீண்டும் அந்த ஆறு ரூபாய்க்கு சோப்பு விற்கும் கடைக்குச் சென்று அவர்களால் எப்படி இவ்வளவு குறைந்த விலைக்கு அதுவும் நஷ்டத்திற்கு விற்க முடிகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக செல்வாவுடனேயே கிளம்பினார் அந்தக் கடைக்காரர்.

அந்தக் கடையை அடைந்ததும், கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பையனிடம் “ தம்பி உங்க ஓனர் எங்கப்பா ? “ என்றார் கடைக்காரர்.

“ உங்க பக்கத்துல நிக்குறாரு பாருங்க! “ என்று செல்வாவைக் கையைக் காட்டினான் அந்தப் பையன்.

கடைக்காரருக்கு மீண்டும் ஆச்சர்யம். அதைவிட எப்படி பத்து ரூபாய்ச் சோப்பினை ஆறு ரூபாய்க்கு விற்க முடிகிறது என்ற குழப்பம் வேறு.

“ எப்படி உங்களால பத்து ரூபா சோப்ப ஆறு ரூபாய்க்கு விற்க முடியுது ? உங்க டீலர் ரொம்ப குறைஞ்ச விலைக்குத் தராரா?“

“ ஆமா, எங்க டீலர் இலவசமா தரார்! “ என்றார் செல்வா.

“ அது யாருங்க, எனக்கும் அறிமுகப் படுத்தி வையுங்க. நானும் வாங்கிக்குவேன்ல! “

” அந்த டீலரே நீங்கதான்!” என்றார் செல்வா.

Saturday, December 3, 2011

தெரு நாய்

செல்வா தனது பள்ளிப் படிப்பினை முடித்துக்கொண்டு வெளியூரில் இருந்த கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார்.

அவரது சொந்த ஊருக்கும் , அவர் பயின்ற கல்லூரிக்கும் நீண்ட தொலைவு என்பதால் கல்லூரிக்குப் பக்கத்தில் தனியாக ஒரு அறை எடுத்துத் தங்கி அங்கிருந்து கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் தெருவில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது வலதுகாலை நன்றாகக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.

உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். செல்வாவின் காயங்களுக்கு மருந்து போட்ட மருத்துவர் “ இது வெறிநாய்க் கடியானு சரியா தெரியல, அதனால ஒரு மூனு நாளைக்கு உங்களக் கடிச்ச நாய வாட்ச் பண்ணுங்க, மூனு நாளைக்கு அப்புறம் அது என்னாச்சுனு வந்து சொல்லுங்க” என்று கூறி அனுப்பினார்.

செல்வாவும் மருத்துவர் சொன்னது போலவே அந்த நாயினைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டு வந்தார்.

மூன்றாம் நாள் மருத்துவமனைக்குச் சென்ற செல்வாவிடம் “ அந்த நாய் எப்படி இருக்குது ? நல்லா வாட்ச் பண்ணுனீங்களா ?“ என்று வினவினார் மருத்துவர்.

” அது ஒன்னும் ஆகல டாக்டர், அப்படியேதான் இருக்குது, என்ன கொஞ்சம் குண்டாகிருச்சு!”

” நல்லவேளை ஒன்னும் ஆகல, வெறிபிடிச்ச நாயா இருந்தா செத்துப் போயிருக்கும். ஒன்னும் பிரச்சினை இல்லை; நீங்க பயப்படாம போங்க! “ என்றார் மருத்துவர்.

” ஒரே நாய் இரண்டு தடவ சாகுமா என்ன ? “ ஆச்சர்யமாய்க் கேட்டர் செல்வா.

” என்ன சொல்லுறீங்க ? இரண்டு தடவ எப்படிச் சாகும் ? “

“ இல்ல டாக்டர், நீங்க அந்த நாய வாட்ச் பண்ணச் சொன்னீங்கள்ல, அப்பவே நான் அது பின்னாடி போனேன். ஆனா அது ஒரு எடத்துல நிக்கவே இல்ல, அதான் அப்பவே அத கொன்னு எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன். இந்த மூனுநாளா செத்துப் போன நாயத்தான் பார்த்துட்டு இருந்தேன். நீங்க மறுபடி செத்துப்போகும்னு சொல்லுறீங்களே, அதான் கேட்டேன்! “

இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!