Friday, October 14, 2011

காயம்

இது செல்வா முதல் முதலாக மிதிவண்டி பழகியபோது நிகழ்ந்த நிகழ்ச்சி.

நீண்ட நாட்களாக வீட்டில் போராடியதன் பயனாக அன்றுதான் செல்வாவிற்கு அவரது தந்தை புதிய சைக்கிள் ஒன்றை வாங்கித் தந்திருந்தார்.

இதற்கு முன்னர் செல்வா மிதிவண்டி ஓட்டியதில்லை என்பதால் அதனை தெருவில் தெற்கும் வடக்குமாக உருட்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த அவரது நண்பர் செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுத் தருவதாகக் கூறினார்.

செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டுவதின் சாதுர்யங்களைச் சொல்லிகொண்டே செல்வாவை மிதிவண்டியின் மீதெறி அழுத்தச் சொல்லிவிட்டு கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டார் அவரது நண்பர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வாவுடன் அவரும் மிதிவண்டியில் ஏறிக்கொள்ள இருவருமாக ஓட்டத்தொடங்கினர். ஆனால் செல்வாவிற்குப் புதுப்பழக்கம் என்பதால் சரியாகத் திருப்பத்தெரியாததால் அருகில் இருந்த ஒரு குழிக்குள் சைக்கிளுடன் சேர்ந்து இருவரும் விழுந்துவிட்டனர்.

பெரிய குழியாக இல்லாவிட்டாலும் இருவருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுவிட்டது. எப்படியும் மருத்துவமனைக்குச் சென்றுதான் ஆகவேண்டும் என்பது தெரிந்தது.

இருவரும் குழியிலிருந்து மெதுவாக எழுந்து தார்ச்சாலைக்கு வந்தனர். அப்பொழுது செல்வா தனது முழங்கைகளை மடக்கி தார்ச்சாலையில் தேய்க்க ஆரம்பித்தார். ஒரு காயத்திற்குப் பதிலாக பல காயங்கள் ஏற்பட்டுவிட்டது. 

” டேய், டேய்! என்ன பண்ற ? “ குழப்பத்துடனும் பீதியுடனும் கேட்டார் நண்பர்.

“ அப்புறமா சொல்லுறேன்! “ என்றவாரு சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார் செல்வா.

மறுநாள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். செல்வா கையில் பெரிய கட்டுடன் நின்றுகொண்டிருந்தார். 

“ எதுக்குடா கைய நிலத்துல ஒரசி பெரிய காயம் பண்ணிட்ட ? “ நண்பரின் கேள்வி.

“ உனக்கு ஒரே காயம்தானே, உங்கிட்ட டாக்டர் எவ்ளோ பீஸ் வாங்கினார் ? “

“ 50 ரூபா! “

“ எனக்கு 6 காயம். அதுக்கும் அவர் அவ்ளோதான் வாங்கினார். ஒரு காயத்துக்கு ஐம்பது ரூபா குடுக்கிறதுக்கு நான் என்ன உன்ன மாதிரி இளிச்சவாயனா? அதான் நிலத்துல தேச்சு ஆறு காயம் பண்ணிட்டேன் “ என்று தனது அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினார் செல்வா.

அன்றிலிருந்து அவரது நண்பர் செல்வாவுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.



Saturday, October 8, 2011

மிமிக்ரி

இது செல்வா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.

அந்த வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் விமரிசையாக ஏற்பாடாகிக்கொண்டிருந்தன.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என அனைத்து வகுப்பிலும் மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

போட்டியில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஒரு நாளுக்கு ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டது.

செல்வாவின் வகுப்பு மாணவர்களுக்கு சதுரங்கம் மற்றும் மிமிக்ரி செய்யும் போட்டிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தன. செல்வாவும் இரண்டு போட்டிகளிலும் பங்கெடுக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

முதலில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. உண்மையில் செல்வாவிற்கு சதுரங்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அது ஒருவகையான தாயக்கட்டை விளையாட்டு என்றே நினைத்திருந்தார். விளையாட்டிற்குச் சென்ற பின்னர்தான் அது வேறுவிதமான விளையாட்டு என்பதைப் புரிந்துகொண்டார். 

சிறிது நேரம் சமாளிக்க முயன்று தோற்றுப்போனார். இறுதியில் தனக்கு இந்த விளையாட்டு தெரியாதென ஒப்புக்கொண்டார். வெளியில் செல்வாவின் வகுப்புத் தோழர்கள் அவரைப் பலவாறு கிண்டல் செய்யத் தொடங்கினர். செல்வாவிற்குப் பெருத்த அவமானமாகிப் போய்விட்டது. அடுத்த போட்டியில் எப்படியேனும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் எனத் தீர்மானம் செய்துகொண்டார்.

அன்று இரவு முழுவதும் தனியாக உட்கார்ந்து மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஒரு குரலைக் கூடச் சரியாக மிமிக்ரி செய்ய முடியவில்லை. செல்வாவிற்கு பயம் அதிகரித்தது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் தோற்றுப்போனால் நண்பர்களின் கிண்டலைத் தாங்கிக்கொள்ள முடியாதே என்று கவலைப்பட்டார்.

அடுத்த நாள் மிமிக்ரி செய்யும் போட்டியின் விதிமுறைகளில் மிமிக்ரி செய்யும்போது யாரையேனும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் செல்வாவிற்கு ரவியைத் துணைக்கு அழைத்துவந்தால் எப்படியும் இந்தப் போட்டியில் வென்றுவிடலாம் என்பதால் ரவியின் பெயரை உதவிக்கு என்பதில் சேர்த்துக்கொண்டார்.

போட்டிக்கான நாளும் வந்தது. கையில் ஒரு பூனையுடன் மிமிக்ரி செய்யும் மேடைக்குச் சென்றார் செல்வா. அங்கிருந்த நடுவர் ஆச்சர்யத்துடன் “ பூனை எதற்கு? “ என்றார்.

“ இது பேரு ரவிங்க சார், எனக்கு உதவிக்கு!,கார்டுல எழுதிருக்கும் பாருங்க “

“ சரி என்ன மாதிரி மிமிக்ரி செய்யப் போற ? “

” சாப்பாடு போட்டா பூனை எப்படி கத்தும், அடிச்சா எப்படி கத்தும்? இந்த ரண்டும் நான் செய்யப் போறேன் சார்”

“ வெரி குட், அப்புறம் பூனை எப்படி ஹெல்ப் பண்ணப் போகுது ? ”

” சாப்பாடு போடுறது , அடிக்கிறதெல்லாம் நான் பண்ணப்போறென் சார், கத்துற ஹெல்ப் மட்டும் அது பண்ணும்! “ என்றார்.