Saturday, November 19, 2011

டாமி

செல்வாவின் பக்கத்து வீட்டில் டாமி என்ற செல்லப்பிராணியை வளர்த்து வந்தார்கள்.

அதன் விளையாட்டுத்தனமும், கொழுகொழுவென்று வளர்ந்திருந்த அதன் முடிகளும், “வள் வள்” என்று வாலாட்டிக்கொண்டே அது குறைக்கும் விதமும் செல்வாவிற்கு வெகுவாகப் பிடித்துப்போனது. தானும் ஒரு டாமி வாங்கி வளர்க்கவேண்டும் என்று நினைத்தார்.

அடுத்தவாரமே மிகச் சிரமப்பட்டு அதே போன்றதொரு அழகான வெள்ளை நிற டாமியை வாங்கி வந்துவிட்டார் செல்வா.

அவர்கள் செய்யும் அனைத்தையும் செல்வாவும் செய்தார். அதற்கு தினமும் பால் வைப்பதும், சாப்பாடு வைப்பதுமாக கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார். இரண்டு நாட்களுக்கொருமுறை ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டவும் செய்தார். 

அவர்கள் டாமியை விட செல்வாவின் டாமி சற்றுப் பெரிதாக இருந்தது. ஆனால் வால் மட்டும் குட்டையாக இருந்தது. உருவம் பெரிதாக இருக்கிறதென்று ஒருபுறம் சந்தோசமாகவும், மற்றொருபுறம் வால் சிறிதாக இருக்கிறதென்று வருத்தமாகவும் இருந்தது.

தனது டாமியும் அவர்களின் டாமியைப் போல் வெள்ளையாக இருந்தாலும் சாப்பாடு வைத்தால் வாலாட்டுவது இல்லையே என்று செல்வாவிற்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் வளர்ந்தால் பழகிக்கொள்ளும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

செல்வாவின் டாமியோ வாலாட்டாததுடன் யாரேனும் வந்தால் குறைப்பதும் இல்லை. தனது டாமிக்கு என்னவோ குறை உள்ளது என்று நினைத்த செல்வா அதனைக் கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று அதன் குறைகளைப் பற்றிச் சொன்னார்.

பக்கத்து வீட்டுக்காரரின் டாமியைப் பற்றியும் அதை அவர்கள் வளர்ப்பதைப் பற்றியும் சொல்லிவிட்டு தானும் தனது டாமியை அவ்வாறேதான் வளர்ப்பதாகவும் ஆனாலும் தனது டாமி குறைப்பதில்லை என்றும் புலம்பினார்.
 
செல்வாவின் டாமியையும் செல்வா சொன்ன குறைகளையும் பார்த்து மருத்துவருக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு “ உங்க டாமி குறைக்காது! “ என்றார்.

” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, இத எப்படியாவது குறைக்க வையுங்க! “ என்று கெஞ்சலாகக் கேட்டார் செல்வா.

“ என்னதான் செலவு பண்ணினாலும், டாமினு பேர் வச்சுக் கூப்பிட்டாலும், சாப்பாடு போட்டாலும் ஆட்டுக்குட்டிய நாய்க்குட்டியா மாத்த முடியாது! அந்த டெக்னாலஜி இன்னும் வளரல!“ சிரித்தவாறே பதிலளித்தார் மருத்துவர்.

Friday, November 4, 2011

பூச்செடி

அப்போது செல்வா இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை.

செல்வாவும் அவரது தாயாரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அங்கே அழகழகான பூச்செடிகள் நிறைய இருந்தன. அவற்றைப் பார்த்த நம் செல்வாவிற்கு தனது வீட்டிலும் அதே போல பூச்செடிகள் வைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

அங்கிருந்து சில சிறிய பூச்செடிகளை ஒரு காகிதத்தில் போட்டு வீட்டிற்கு எடுத்துவந்து ஒரு பூந்தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

தினம் தினம் அந்தப் பூச்செடிகள் வளர்ந்துவிட்டனவா என்று பார்ப்பதும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவதுமாக நாட்கள் நகர்ந்தன. அது மட்டும் இல்லாமல் அதற்கு என்ன பேர் வைப்பது, அது சாப்பிடுமா ? என்றெல்லாம் வீட்டில் இருப்பவர்களிடம் கேள்விகளைக் கேட்டு நச்சரித்துகொண்டிருந்தார்.

” பூச்செடினா எதுவுமே சாப்பிடாது. அதுக்கு வாய் இல்லைல. அதுக்குத் தண்ணி மட்டும் ஊத்தினா போதும்” என்று அவரது சகோதரர் பதில் சொன்னார்.

செல்வாவும் தினமும் தண்ணீர் ஊற்றி வந்தார். ஆனால் இரண்டொரு நாட்களில் அந்தச் செடி வாட ஆரம்பித்திருந்தது. 

எதேச்சையாக அந்தச் செடியைப் பார்த்த அவரது தாயார் “ ஏன்டா, செடிக்குத் தண்ணியே ஊத்துறது இல்லையா ? வாடிப்போச்சு பாரு! “ 

” இல்ல ஊத்திட்டுத்தான் இருக்கேன். இருங்க இன்னும் கொஞ்சம் ஊத்தலாம்!” என்று கூறிக்கொண்டு ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வந்து அதன் இலைகளைப் பிடித்து லேசாக தண்ணீருக்குள் மூழ்கச் செய்தார். ( செல்வாவைப் பொறுத்தவரை அது ஒரு விலங்கைப் போல வாய் வழியாகத் தண்ணீர் குடிக்கும் என்று நினைத்துக்கொண்டு அதன் இலைகளை அவ்வாறு தண்ணீரில் அமுக்கினார்).

“ டேய் டேய், என்ன பண்ற ? ”

” செடிக்குத் தண்ணி காட்டுறேன்! “ 

“ இப்படி எதுக்குக் காட்டுற ? “

” நம்ம நாய்க்கு இப்படித்தானே ஒரு பிளேட்ல தண்ணி வைக்கிறோம், அது மாதிரி இதுவும் குடிச்சிக்கும்ல ? “

“ ஐயோ! அப்படியெல்லாம் இது தண்ணி குடிக்காது. சும்மா மேல ஊத்திவிடு! “

“ தண்ணிய அது மேல ஊத்தினா அதுக்கு சளி பிடிச்சிக்காதா ? “ மீண்டும் குழப்பத்துடன் கேட்டார் செல்வா.

“ செடிக்கெல்லாம் எங்கடா சளி பிடிக்குது, புதுசு புதுசா யோசிக்கிறியே! “ என்று கொஞ்சலாகத் தூக்கி செடி வளரும் விதங்களைப் பற்றியும் அது வேர் வழியே தண்ணீர் உறிஞ்சும் என்றும் விளக்கிக் கூறினார்.

பின் சில நாட்கள் கடந்தன. செடிகள் முன்பு இருந்ததை விட வாடியிருந்தன.

செல்வாவை அழைத்த அவரது தாயார் “ ஏன்டா செடி மறுபடியும் வாடிருக்கு ? தண்ணி ஊத்துறது இல்லையா ?“ என்றார்.

“ இல்லம்மா, தினமும் தண்ணி ஊத்திட்டுத்தான் இருக்கேன். ஆனா வாடுது! “ என்றார் சோகமாக.

” எப்படி ஊத்துற ? இப்ப ஒரு தடவ ஊத்து!“

குடுகுடுவென வீட்டிற்குள் ஓடி வழக்கம்போலவே ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவந்து, பூந்தொட்டியில் இருந்த ஒரு செடியைப் பிடுங்கி, அதன் வேரில் தண்ணீரை ஊற்றிவிட்டு மீண்டும் இருந்த இடத்திலேயே நட்டுவிட்டு “ செடிய சுத்தியும் தண்ணி ஊத்தினா அதோட வேருக்குப் போய்ச் சேர நேரமாகும்ல, அதான் நானே வேர்ல தண்ணி ஊத்தினேன்! “ என்றார் செல்வா.