செல்வாவிற்கும் முட்டைக்கும் எப்போதுமே சரிப்பட்டு வருவதில்லை. அடிக்கடி முட்டைகளால் குழப்பம் ஏற்படுவதும் அதனால் பிரச்சினைகள் வருவதுமாக இருந்தது. இருந்தாலும் செல்வா தனது அறிவுத்திறமையால் அனைத்தையும் சமாளித்து வந்தார். சிலசமயம் நண்பர்களை இழக்கவேண்டியதாகவும் இருந்தது.
ஒருமுறை செல்வாவின் வீட்டிற்கு உறவினர் வந்திருந்ததால் செல்வாவிடம் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று முட்டை வாங்கிவருமாறு கூறியிருந்தார் அவரது தாயார்.
ஒரு சிறிய பையை எடுத்துக்கொண்டு கடைக்குக் கிளம்பினார் செல்வா.
கடையில் அவரது நண்பர் ஒருவரும் முட்டைகளை வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அந்த முட்டைகளை எடுத்துச் செல்வதற்கு பை எதுவும் எடுத்து வராததால் செல்வாவின் பையிலேயே அவரது முட்டைகளையும் வைத்துவிட்டு வீட்டில் சென்று பிரித்துக்கொள்ளலாம் என்றார்.
அப்படி தனது பையில் அவர் வாங்கிய முட்டைகளையும் வைத்துக்கொண்டால் அதற்கு என்ன உபகாரம் கிடைக்கும் என்று கேட்டார் செல்வா.தனது மிதிவண்டியை வீடு வரைக்கும் ஓட்டுவதற்குத் தருவதாகக் கூறினார் அந்த நண்பர்.
செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டத்தெரியாதென்றாலும் ஏதோ மிதிவண்டி ஓட்டும் சந்தோசத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்.
பாதி தூரம் வரை மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தவர் ஏறி ஓட்ட எத்தனித்து திடீரென்று கீழே போட்டு விழுந்துவிட்டார். மிதிவண்டியில் பையில் இருந்த சில முட்டைகள் உடைந்துவிட்டன.
என்ன செய்வதென்று தெரியாமல் செல்வா விழித்துக்கொண்டிருக்கவே அவரது நண்பர் ஒரு யோசனை கூறினார்.
” ஒடையாம இருக்கிற முட்டைகள சமமா பிரிச்சு எடுத்துக்கலாம்!”
“அப்படின்னா இதையும் ஒடைக்கனுமா? “
ஏற்கெனவே மிதிவண்டி கீழே விழுந்த கோபத்தில் இருந்த அவரது நண்பர் செல்வாவை எரித்துவிடுவதுபோலப் பார்த்துவிட்டு “ இங்க மொத்தம் பத்து முட்டை இருக்கு , நீ அஞ்சு முட்டைய எடுத்துக்க , நான் அஞ்சு முட்டைய எடுத்துக்கிறேன்! “ என்றார்.
“ மிச்ச முட்டை என்னாச்சுனு கேட்டா என்ன சொல்லறதாம் ? “
“ உன்னோட முட்டைல பாதியும் , என்னோட முட்டைல பாதியும் சைக்கிள்ல இருந்து கீழ விழுந்து ஒடஞ்சு போச்சுனு சொல்லு! “
“ ஆனா நம்பமாட்டாங்களே! “ என்று பரிதாபமாகச் சொன்னார் செல்வா.
“ ஏன் ? “
“ஏன்னா நான்தான் முட்டையிடுறதில்லையே, அப்புறம் எப்படி என்னோட முட்டை உடைஞ்சு போச்சுனு சொல்ல முடியும்?! “ என்று குழம்பினார் செல்வா.