Thursday, September 22, 2011

மீண்டும் முட்டையால் வந்த குழப்பம்

செல்வாவிற்கும் முட்டைக்கும் எப்போதுமே சரிப்பட்டு வருவதில்லை. அடிக்கடி முட்டைகளால் குழப்பம் ஏற்படுவதும் அதனால் பிரச்சினைகள் வருவதுமாக இருந்தது. இருந்தாலும் செல்வா தனது அறிவுத்திறமையால் அனைத்தையும் சமாளித்து வந்தார். சிலசமயம் நண்பர்களை இழக்கவேண்டியதாகவும் இருந்தது. 

ஒருமுறை செல்வாவின் வீட்டிற்கு உறவினர் வந்திருந்ததால் செல்வாவிடம் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று முட்டை வாங்கிவருமாறு கூறியிருந்தார் அவரது தாயார்.

ஒரு சிறிய பையை எடுத்துக்கொண்டு கடைக்குக் கிளம்பினார் செல்வா.

கடையில் அவரது நண்பர் ஒருவரும் முட்டைகளை வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அந்த முட்டைகளை எடுத்துச் செல்வதற்கு பை எதுவும் எடுத்து வராததால் செல்வாவின் பையிலேயே அவரது முட்டைகளையும் வைத்துவிட்டு வீட்டில் சென்று பிரித்துக்கொள்ளலாம் என்றார்.

அப்படி தனது பையில் அவர் வாங்கிய முட்டைகளையும் வைத்துக்கொண்டால் அதற்கு என்ன உபகாரம் கிடைக்கும் என்று கேட்டார் செல்வா.தனது மிதிவண்டியை வீடு வரைக்கும் ஓட்டுவதற்குத் தருவதாகக் கூறினார் அந்த நண்பர்.

செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டத்தெரியாதென்றாலும் ஏதோ மிதிவண்டி ஓட்டும் சந்தோசத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்.

பாதி தூரம் வரை மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தவர் ஏறி ஓட்ட எத்தனித்து திடீரென்று கீழே போட்டு விழுந்துவிட்டார். மிதிவண்டியில் பையில் இருந்த சில முட்டைகள் உடைந்துவிட்டன.

என்ன செய்வதென்று தெரியாமல் செல்வா விழித்துக்கொண்டிருக்கவே அவரது நண்பர் ஒரு யோசனை கூறினார்.

” ஒடையாம இருக்கிற முட்டைகள சமமா பிரிச்சு எடுத்துக்கலாம்!”

“அப்படின்னா இதையும் ஒடைக்கனுமா? “

ஏற்கெனவே மிதிவண்டி கீழே விழுந்த கோபத்தில் இருந்த அவரது நண்பர் செல்வாவை எரித்துவிடுவதுபோலப் பார்த்துவிட்டு “ இங்க மொத்தம் பத்து முட்டை இருக்கு , நீ அஞ்சு முட்டைய எடுத்துக்க , நான் அஞ்சு முட்டைய எடுத்துக்கிறேன்! “ என்றார்.

“ மிச்ச முட்டை என்னாச்சுனு கேட்டா என்ன சொல்லறதாம் ? “

“ உன்னோட முட்டைல பாதியும் , என்னோட முட்டைல பாதியும் சைக்கிள்ல இருந்து கீழ விழுந்து ஒடஞ்சு போச்சுனு சொல்லு! “

“ ஆனா நம்பமாட்டாங்களே! “ என்று பரிதாபமாகச் சொன்னார் செல்வா.

“ ஏன் ? “

“ஏன்னா நான்தான் முட்டையிடுறதில்லையே, அப்புறம் எப்படி என்னோட முட்டை உடைஞ்சு போச்சுனு சொல்ல முடியும்?! “ என்று குழம்பினார் செல்வா.


Friday, September 16, 2011

எனக்கு பதில் நீ


செல்வா கணிதவியலில் தனது முதுநிலைப் படிப்பினை முடித்துவிட்டு மேற்கொண்டு ஆய்வுப்படிப்பினைத் தொடரலாம் என்று காத்திருந்தார்.

செல்வாவுடன் பனிரண்டாம் வகுப்புவரை படித்த அவரது நண்பர் ஒருவர் அதற்குப் பிறகு தொலைநிலைக் கல்வி மூலமாக இளநிலைக் கணிதவியல் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரால் தேர்ச்சி பெறவே முடியவில்லை.

செல்வா தனது முதுநிலை கணிதவியல் படிப்பினை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அவரது நண்பருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது அவருக்குப் பதிலாக செல்வாவை பரீட்சை எழுத அனுப்பலாம் என்பதே அந்த் யோசனை.

செல்வாவிடம் இந்த யோசனையைச் சொன்னதும் முதலில் செல்வா தான் ஆள் மாறாட்டம் செய்ய ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனாலும் நீண்ட நேரம் போராடி செல்வாவை ஒப்புக்கொள்ள வைத்தார் அவரது நண்பர்.

பரீட்சைக்கான நாளும் வந்தது.நடுங்கிக்கொண்டேதான் பரீட்சைக்குப் போனார். ஆனால் எதிர்பார்த்த அளவு அங்கு கெடுபிடி ஏதும் இல்லை. செல்வாவும் மிக்க சந்தோசத்துடன் பரீட்சையை முடித்துவிட்டு மகிழ்வுடன் வெளியே வந்தார்.

மீதமிருந்த நான்கு பரீட்சைகளையும் தானே எழுதுவதாக நண்பனிடம் கூறிவிட்டு எல்லாப் பரீட்சைகளையும் எழுதிக்கொடுத்தார். அவரது நண்பருக்கு செல்வாவின் மீது அளவு கடந்த மரியாதையும் நட்பும் ஏற்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு வெளியான தேர்வு முடிவுகள் அவரது நண்பரை மிக்க கோபத்திற்கு ஆளாக்கியது. ஆம். எல்லாத் தேர்வுகளிலும் தோல்வி என்று வந்திருந்தது. உடனே செல்வாவை அழைத்து “ டேய், என்னடா Exam எழுதின? எல்லாத்திலயும் ஃபெயில்! நீ எழுதினா பாஸ் ஆவேன்னுதான உன்ன எழுதச் சொன்னேன், நீ எல்லாம் எப்படிடா M.Sc படிச்ச ? “

“காலேஜ் போய்த்தான் படிச்சேன்! அதுக்கு இப்ப என்ன ?“

” காலேஜ் போய் கிழிச்ச ? ஒரு பரிட்சை ஒழுங்கா எழுதத் தெரியல. இதுல ... “ என்று வாய்க்கு வந்தவாரு திட்டினார் செல்வாவின் நண்பர்.

செல்வாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. ” உனக்கு என்னதாண்டா பிரச்சினை ? இப்ப எதுக்கு என்னைய திட்டுற ? நீ சொன்ன மாதிரி தான நான் பண்ணினேன்“

“ நான் சொன்ன மாதிரி பண்ணுனியா ? “

“ ஆமா , ’என்ன மாதிரியே எழுதிட்டு வா னு ’ எங்கிட்ட சொன்னீல அதத்தான் பண்ணிருக்கேன்! “ குழப்பினார் செல்வா.

“ அதுக்கு என்ன பண்ணின ? “

“ உன்ன மாதிரி எழுதினா பெயில்தான ஆகனும். அதனாலதான் எல்லா கேள்விக்கும் தப்புத் தப்பா எழுதிட்டு வந்தேன்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் செல்வா.




Thursday, September 8, 2011

குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிய செல்வா!


செல்வாவின் ஊரிற்கு ஒரு வினோதமான மனிதர் வந்திருந்தார். தான் மட்டுமே சிறந்த அறிவாளி என்றும் தன்னைவிடச் சிறந்த ஒருவர் இந்த உலகத்திலேயே இல்லை என்றும் கூறிக்கொண்டார்.

ஆனால் செல்வாவின் அறிவுத்திறனை அறிந்திருந்த அந்த கிராமத்து மக்கள் செல்வா தான் சிறந்த அறிவாளி என்று கூறினர்.

இதனால் எரிச்சலடைந்த அந்த மனிதர் செல்வாவைச் சோதனை செய்து பார்த்தால்தான் இதை நம்புவேன் என்று கூறி செல்வாவின் அறிவுத்திறனைச் சோதிக்க ஆரம்பித்தார்.

செல்வாவால் தன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என்று நினைத்த அந்த மனிதர் ஏமாற்றமடைந்தார்.

எப்படியாவது செல்வாவைத் தோற்கடித்தே தீர வேண்டும் என நினைத்த அந்த மனிதர் அருகில் இருந்த குழி ஒன்றைக் காட்டி ”இதைத் தூக்கி அந்தக் கிணற்றுக்குள் போட்டால் நீ அறிவாளி என ஒத்துக்கொள்கிறேன்!” என்றார்.

எப்படியும் செல்வா இது முடியாது என்று விலகிவிடுவார் என்று நினைத்தே இதைக் கூறினார்.

ஆனால் செல்வா வழக்கத்தை விட சற்று உற்சாகமாக “ அது ரொம்ப ஈஸிங்க, ஆனா எனக்கு ஒரு நாள் அவகாசம் தரனும் “ என்று கேட்டுக்கொண்டார். மேலும் கிணற்றின் ஆழத்தையும் , குழியின் ஆழத்தையும் அளந்துகொள்ளுமாரு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

மறு நாள் காலையில் அந்தக் குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிவிட்டதாக அந்த மனிதரைக் குழி இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார்.

அவர் சொன்னது போலவே அந்த இடத்தில் குழியைக் காணவில்லை. அந்த மனிதருக்கோ அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இதை தான் நம்ப மாட்டேன் என்றும் கிணற்றுக்குள் கிடக்கும் அந்தக் குழியைக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிணற்றை அளந்து பார்த்தால் தெரியும் என்று செல்வா சொன்னதும் உடனே கிணறு அளக்கப்பட்டது. கிணற்றின் ஆழம் நேற்று இருந்ததிலிருந்து 4 அடி ஆழமாக இருந்தது. ஆச்சர்யப்பட்ட அந்த மனிதர் செல்வா வென்றுவிட்டார் என்று அறிவித்துவிட்டு ” எப்படி அந்தக் குழிய இதுக்குள்ள தூக்கி வீசினீங்க ?“

“ கிணத்துக்குள்ள இருந்து மண்ண வாரி இதுக்குள்ள கொட்டினேன்! “ என்றார் செல்வா.



Tuesday, September 6, 2011

சேட்டிலைட் டிவி


செல்வாவின் உறவினர் வீட்டில் சிறிது நாட்களுக்கு முன்னர் செயற்கைக்கோள் மூலம் இயங்கும் டிஸ் டிவி வாங்கியிருந்தார்கள்.

அவர்களின் வீட்டிற்குச் சென்ற செல்வா அது இயங்கும் விதத்தை மிக ஆச்சர்யமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

தானும் அதுபோல ஒன்று வாங்கவேண்டும் என்று ஆவல் செல்வாவிற்கு எழுந்தது. அதன் விலை விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு அது போன்ற டிஸ் டிவி வாங்கும் அளவு பணம் செல்வாவிடம் சேர்ந்திருந்தது. எப்படியும் வாங்கிவிடவேண்டும் என நினைத்த செல்வா மீண்டும் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று எங்கே வாங்கினார்கள் என்பதையும் தெரிந்துகொண்டு தானும் அது போல வாங்கப் போவதாகக் கூறினார்.

அதை ஆமோதித்த அவரது உறவினர் அவர்கள் வாங்கிய அதே கடைக்குக் கூட்டிச் சென்று டிஸ் ஆண்டனா மற்றும் ரிசீவர் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தார்.

செல்வாவிற்கு அவற்றைப் பொருத்தத் தெரியாதென்பதால் அவரது உறவினரையே தன் வீட்டிற்கு வந்து பொருத்தித் தருமாறு கேட்டுகொண்டார்.

வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ரிசீவரை டிவிக்கு அருகில் வைத்துக்கொண்டு டிஸ் ஆண்டனாவை வீட்டின் மாடியில் வைத்துவிடலாமா என்று கேட்டார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த செல்வா அருகில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான அறை ஒன்றைச் சுட்டிக்காட்டி அதில் பொருத்தலாம் என்றார்.

” மாடில வச்சா சிக்னல் ரொம்ப தெளிவா கிடைக்கும், இங்க வச்சா அவ்ளோ தெளிவா இருக்காது, அதனால மாடிலயே வைக்கலாம்! “ என்றார் உறவினர்.

“ வெயில்லயும் , மழைலயும் நனைஞ்சா என்னத்துக்கு ஆகுறதுனுதான் அந்த ரூம் கட்டிருக்கேன். அதுக்குள்ள வச்சிடலாம், வெளில வேண்டாம்! “ என்றார் செல்வா.

நீண்ட நேரம் போராடியும் செல்வா ஒப்புக்கொள்ளாததால் எரிச்சலடைந்த அவரது உறவினர் அந்த அறையிலேயே டிஸ் ஆண்டனாவை வைத்துவிட்டு பிறகு வந்து சரி செய்வதாகக் கூறிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடி விட்டார்.