இது செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி.
இரண்டு வயதாக இருக்கும்போது செல்வா அவரது நிழலைப்பார்த்து மிகவும் பயந்துகொள்பவராக இருந்தார். அடிக்கடி அவரது தாயாரிடம்
“இது என்ன, இவன் ஏன் எங்கூடவே வரான் ?“ என்று கேட்டுக்கொண்டேயிருப்பார்.
“ அது உன்னோட நிழல், உங்கூடத்தான் வரும் ! “
“அது எனக்கு பிடிக்கவே இல்ல, அவன போகச்சொல்லு. இல்லைனா கல்லத்தூக்கி அவன் மண்டைல போட்டிருவேன்! “ என்று அடிக்கடி அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்.
ஒருநாள் நிழலைப்பார்த்து மிகப்பயந்து போனார். அன்று அவரது நிழல் அவரை விட்டுப்போயே தீரவேண்டுமென தரையில் உருண்டு அழத்தொடங்கிவிட்டார்.
செல்வாவின் பிடிவாத குணத்தையறிந்த அவரது தாயார் ” சரி, இன்னிக்கு உன்னோட நிழலுக்கு ஒரு முடிவு கட்டிறலாம் வா! “ என்று செல்வாவை தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார்.
அங்கே ஒரு பெரிய குழியை வெட்டி அதன் ஓரத்தில் செல்வாவை நிற்க வைத்து ” குழிக்குள்ள பாரு, உன்னோட நிழல் இருக்கு. இப்ப மண்ணைப் போட்டு மூடிட்டா அது மண்ணுக்குள்ள புதைஞ்சிடும். அப்புறம் உங்கூட வராது! ஆனா வீடு போக வரைக்கும் திரும்பிப்பாக்காம போகனும் சரியா ? “ என்றார் அவரது தாயார்.
செல்வா சரியென்றதும் அந்தக் குழியை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தனர். குழிக்குள் நிழலைப் போட்டு மூடிவிட்டோம் என்று நினைத்ததால் செல்வாவும் அதற்குப்பிறகு அன்று முழுவதும் அவரது நிழலைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.
மறுநாள் காலையில் விளையாடச் சென்ற செல்வா கல கலவெனச் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தார்.
“ ஏன்டா சிரிக்கிற ?” என்றார் செல்வாவின் தந்தை.
” யாரோ ஒருத்தரோட நிழல் என்கூட வந்து ஒட்டிருச்சு! ஹா ஹா ! பாவம் அவுங்க! இத எப்படி அவுங்களுக்குத் திருப்பிக்கொடுக்கிறது ? “ என்று சிரிப்பை அடக்கமாட்டாமல் கேட்டார் செல்வா.
” அது உன்னோட நிழல்தான். குழிக்குள்ள இருந்து எந்திருச்சு வந்திருக்கும்! “ என்று எதயாவது சொன்னார் அவரது தாயார்.
“ இல்ல அது குழிக்குள்ள விழுந்ததால அதுக்கு தலைல அடி பட்டிருச்சோனு நினைச்சு அதுக்கு கட்டு போடுறதுக்காக காலைல போய் அந்தக் குழிய நோண்டி பார்த்தேன். அது அதுக்குள்ளவேதான் கிடந்திச்சு! இது வேற யாரோ ஒருத்தரோ நிழல். இத எப்படி திருப்பிக்குடுக்கறது ? “ என்று மறுபடியும் தரையில் புரண்டு உருளத்தொடங்கினார் செல்வா.