Monday, August 29, 2011

நிழலின் கதை


இது செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி.

இரண்டு வயதாக இருக்கும்போது செல்வா அவரது நிழலைப்பார்த்து மிகவும் பயந்துகொள்பவராக இருந்தார். அடிக்கடி அவரது தாயாரிடம் 

“இது என்ன, இவன் ஏன் எங்கூடவே வரான் ?“ என்று கேட்டுக்கொண்டேயிருப்பார்.

“ அது உன்னோட நிழல், உங்கூடத்தான் வரும் ! “ 

“அது எனக்கு பிடிக்கவே இல்ல, அவன போகச்சொல்லு. இல்லைனா கல்லத்தூக்கி அவன் மண்டைல போட்டிருவேன்! “ என்று அடிக்கடி அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்.

ஒருநாள் நிழலைப்பார்த்து மிகப்பயந்து போனார். அன்று அவரது நிழல் அவரை விட்டுப்போயே தீரவேண்டுமென தரையில் உருண்டு அழத்தொடங்கிவிட்டார். 

செல்வாவின் பிடிவாத குணத்தையறிந்த அவரது தாயார் ” சரி, இன்னிக்கு உன்னோட நிழலுக்கு ஒரு முடிவு கட்டிறலாம் வா! “ என்று செல்வாவை தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார்.

அங்கே ஒரு பெரிய குழியை வெட்டி அதன் ஓரத்தில் செல்வாவை நிற்க வைத்து ” குழிக்குள்ள பாரு, உன்னோட நிழல் இருக்கு. இப்ப மண்ணைப் போட்டு மூடிட்டா அது மண்ணுக்குள்ள புதைஞ்சிடும். அப்புறம் உங்கூட வராது!  ஆனா வீடு போக வரைக்கும் திரும்பிப்பாக்காம போகனும் சரியா ? “ என்றார் அவரது தாயார்.

செல்வா சரியென்றதும் அந்தக் குழியை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தனர். குழிக்குள் நிழலைப் போட்டு மூடிவிட்டோம் என்று நினைத்ததால் செல்வாவும் அதற்குப்பிறகு அன்று முழுவதும் அவரது நிழலைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.

மறுநாள் காலையில் விளையாடச் சென்ற செல்வா கல கலவெனச் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தார்.

“ ஏன்டா சிரிக்கிற ?” என்றார் செல்வாவின் தந்தை.

” யாரோ ஒருத்தரோட நிழல் என்கூட வந்து ஒட்டிருச்சு! ஹா ஹா ! பாவம் அவுங்க! இத எப்படி அவுங்களுக்குத் திருப்பிக்கொடுக்கிறது ? “ என்று சிரிப்பை அடக்கமாட்டாமல் கேட்டார் செல்வா. 

” அது உன்னோட நிழல்தான். குழிக்குள்ள இருந்து எந்திருச்சு வந்திருக்கும்! “ என்று எதயாவது சொன்னார் அவரது தாயார்.

“ இல்ல அது குழிக்குள்ள விழுந்ததால அதுக்கு தலைல அடி பட்டிருச்சோனு நினைச்சு அதுக்கு கட்டு போடுறதுக்காக காலைல போய் அந்தக் குழிய நோண்டி பார்த்தேன். அது அதுக்குள்ளவேதான் கிடந்திச்சு! இது வேற யாரோ ஒருத்தரோ நிழல். இத எப்படி திருப்பிக்குடுக்கறது ? “ என்று மறுபடியும் தரையில் புரண்டு உருளத்தொடங்கினார் செல்வா. 


Saturday, August 20, 2011

மீண்டும் ரயில்வே அதிகாரியாக செல்வா!


செல்வா சிறந்த அறிவாளி என்பது நாமறிந்ததே. அடிக்கடி தனது புத்திக்கூர்மையை வெளிப்படுத்தக்கூடியவர் என்பதும் நாமறிந்ததே.

அதிலும் தனது உடலில் கெட்ட ரத்தமே ஓடக்கூடாது என்பதற்காக தனது உடலில் உள்ள சிரை (vein) நரம்புகளை முற்றிலும் உடலிலிருந்து எடுத்துவிடவேண்டுமென மருத்தவரிடம் சண்டைபோட்டது கூட செல்வாவின் அறிவுத்திறனுக்குச் சான்றுதான்.

ஒருமுறை ரயில்வே அதிகாரியாக இருந்து சில புதிய திட்டங்களைப் புகுத்தியதற்காக அவர் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் என்பதை நாம் ஏற்கெனவே ரயில்வேயும் செல்வாவும் என்ற கதையின் மூலமாக அறிந்துள்ளோம்.

பின் சிறிது காலங்களுக்குப் பிறகு அவர் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் வேலை கிடைத்து அதிலும் பலப்பல புதிய நுட்பங்களைப் புகுத்தி மக்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.

இருந்தபோதிலும் ரயில்வே துறை மீதிருந்த அவரது ஆசை அகலவேயில்லை.

மீண்டும் ரயில்வே பணிக்கான பரீட்சைகளைத் தொடர்ந்து எழுதி அதில் தேர்வு செய்யப்பெற்று மீண்டும் ரயில்வேயில் பணியில் அமர்ந்தார்.

இந்த முறை மிகக் கவனமாக எல்லா வேலைகளையும் செய்துவந்தார். ஆனாலும் விதி அவரை இந்த வேலையையும் நிம்மதியாகச் செய்யவிடவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு நெடுஞ்சாலைத்துறையில் தான் செய்துவந்த சிற்சில மாற்றங்களை இதிலும் செய்யவேண்டும் என தனது அதிகாரிகளுக்கு விரிவான ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமே அவரது வேலைக்கும் ஆப்பு வைத்தது.

அந்தக் கடித்ததில் முக்கியமாக அவர் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் “ பள்ளி , கல்லூரிகளுக்கு எதிராகவோ அல்லது அருகாமையிலோ இருக்கும் ரயில் தண்டவாளங்களில் வேகத்தடை அமைக்கவேண்டுமென்பதே!”

Thursday, August 18, 2011

ராங் நம்பர்


அன்று செல்வாவின் சகோதரர் புதிதாக செல்போன் ஒன்று வாங்கி வந்திருந்தார்.அதுதான் அவர்கள் வீட்டில் வாங்கப்பட்ட முதல் செல்போன்.

அதனால் செல்வாவிற்கு செல்போன் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 

உறவினர்கள், நண்பர்கள் இப்படி எல்லோருக்கும் அழைத்து செல்போன் வாங்கியிருப்பதையும் அதன் எண்களையும் கொடுத்தபடி இருந்தார் அவரது சகோதரர்.

எல்லோருக்கும் அழைத்து முடித்த பிறகு செல்வாவிடம் அதில் எப்படி எண்களைப் பதிவது என்பதை விளக்கிக்கொண்டிருந்தார்.

“ சரி, ராங் நம்பர்னா என்ன ?” என்று தனது சந்தேகத்தைக் கேட்டார் செல்வா.

“ அது நமக்குத் தெரியாத புது நம்பர்ல இருந்து வரும்! “ 

“ ஆனா எனக்குத்தான் 0 லிருந்து 9 வரைக்கும் எல்லா நம்பரும் தெரியுமே, அப்புறம் எப்படி புது நம்பர்?!” என்று வியந்தார் செல்வா.

“ ஐயோ! புது நம்பர்னா வேற யாருக்கோ கால் பண்ண நினைச்சு நமக்கு பண்ணுறதுதான் ராங் நம்பர்” விளக்கினார் சகோதரர்.

மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய செல்வாவின் சகோதரர் தனது நண்பருக்கு அழைக்கலாம் என்று செல்போனை எடுத்தார். பேலன்ஸ் சுத்தமாகத் தீர்ந்திருந்தது.

“ அட கொடுமையே, 500 ரூபாய்க்கு ரீ சார்ச் பண்ணிருந்தேன், அவ்ளோ எப்படி ஒரே நாள்ல தீர்ந்துபோச்சு, என்ன பண்ணின?” என்று செல்வாவைப் பார்த்துக்கேட்டார்.

” ராங் நம்பர்ல இருந்து கால் பண்ணுறவங்களுக்கு நம்ம நம்பர் தெரியாதுல, அதான் எல்லா ராங் நம்பருக்கும் கூப்பிட்டு நாம செல்போன் வாங்கிட்டோம்னு சொன்னேன்!” என்றார்.



Saturday, August 13, 2011

ஆடி வெள்ளியும் கோழி முட்டையும்


செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை நேரம் செல்வா ஒரு சிற்றுண்டிக்கடையில் அமர்ந்து அவித்த முட்டை ஒன்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவும் போதுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அதுவும் ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.

”ஐயோ! ” வெனத் தலையில் அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்தார்.தெய்வக்குத்தம் ஆகிவிட்டதேயென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மிகச்சிறந்த யோசனை தோன்றியது. சந்தோசத்தில் செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தமிழ்ப்பட வில்லன்களைப் போல வானத்தைப் பார்த்து இரண்டு முறையும் பூமியைப் பார்த்து இரண்டு முறையும் சிரித்துவிட்டு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து “ இன்று நான் இட்டது சைவ முட்டை” என்று எழுதினார்.

பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.

அதாவது கோழி அன்று இட்ட முட்டை சைவம் என்று கோழியே உறுதியளித்துள்ளது என்பதே செல்வாவின் யோசனை. அதற்கான சாட்சிதான் இந்தப் பத்திரம்.

பின்னர் வழக்கம்போல அன்று மாலை கோவிலுக்குச் சென்றார். ஆனால் திடீரென்று அவர் முன்னால் தோன்றிய கடவுள் “ முட்டை சாப்பிட்டுட்டு கோவிலுக்குள் வராதே! “ என்று மிரட்டலாகச் சொன்னார்.

“ ஐயனே நான் முட்டை சாப்பிட்டது உண்மைதான், ஆனால் அது சைவ முட்டை. இதோ அந்தக் கோழியே சாட்சியளித்துள்ளது!” என்று அந்தப் பேப்பரைக் கடவுளிடம் நீட்டினார் செல்வா.

அதை வாங்கிப்பார்த்த கடவுள் ஒரு புன்னைகையுடன் சொன்னார் “ லூசு, இது சேவலோட கால் ரேகை!”




Wednesday, August 10, 2011

வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?


இது செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நடந்தது.

3 அல்லது 4 வயது இருக்கும் போது செல்வா மிதிவண்டி பழகிக்கொண்டிருந்தார். சாலையோரமாக மிதிவண்டியை ஓட்டியவாறு வந்தவர் எதிரில் வந்துகொண்டிருந்தவரின் மீது லேசாக மோதிவிட்டார்.

” ஏய், பாத்துபோ! “ என்றார் எதிரில் வந்தவர்.

“ உன்ன எதுக்கு நான் பாத்துட்டுப் போகனும், நீ என்ன மாமனா ? மச்சானா? மானங்கெட்டவனே!” ( அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்திருந்தார்) என்றார் செல்வா.

” வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா? “ என்று கோபமாகக் கேட்டார் அந்த வாலிபர்.

“ நான் எதுக்கு உங்க வீட்டுல வந்து சொல்லனும், நீ மட்டும் எங்க வீட்டுல வந்து சொன்னியா? “ என்று வழக்கம்போலவே லூசுத்தனமாகக் கேட்டார் செல்வா.

இனியும் இங்கே நிற்பது மரியாதையல்ல என்று அந்த வாலிபர் அங்கிருந்து எதுவும் சொல்லாமலே கிளம்பிவிட்டார்.

அப்பொழுது சாலையில் இருவர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட செல்வா அவசர அவசரமாக தனது மிதிவண்டியைக் கையில் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார்.

வீட்டிற்குள் வந்ததும் ஒரு பெரிய கருப்புத்துணியை எடுத்துக் கண்ணை முழுவதும் மறைத்துக் கட்டிக்கொண்டார்.

கண்ணை மறைத்துக் கட்டிக்கொண்டதால் எதிரில் என்ன வருகிறது என்று கூடத் தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அவரது சகோதரர் “ என்னடா இது? எதுக்கு இப்படி கண்ணக் கட்டிட்டு திறியுற? “ என்றார்.

“ இன்னிக்கு நாலாம் பிறை வரப்போகுதாம்ல, அதப் பார்த்தா நாய் படாத பாடு படனும்னு ரோட்டுல பேசிட்டிருந்தாங்க. அதான் அத பாக்கக் கூடாதுனு இப்படி கட்டிருக்கேன். நீயும் கட்டிக்க! “

” நாலாம் பிறையப் பார்த்தா நாய் படாத பாடு படனும்னு சொல்றதே ஒரு முட நம்பிக்கை,அத பாக்காம இருக்கவே இப்படி நாய் படாத பாடு படுறவங்கள என்ன பண்ணுறது? “ என்று அதட்டினார் அவரது சகோதரர்.

(சத்தியமா இது கற்பனைக் கதைங்க! உண்மை நிகழ்ச்சி அல்ல)