Thursday, July 21, 2011

நிலவுக்கு ஒரு பயணம்


செல்வாவின் ஊர் அன்று பரபரப்பாக இருந்தது. ஆம் நிலவுக்கு ஆட்களை அனுப்பும் இந்தியாவின் முயற்சி வெற்றி பெற்று அதன் பிறகு நடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட இலவசத்திட்டத்தின் பயனாக ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஐந்து பேரை நிலவுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுக் கொண்டிருந்தது!

அந்த வகையில் செல்வாவின் ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் செல்வாவும் ஒருவர்.

மொத்தம் ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதால் ஒவ்வொருவராக அவர்களின் உடல் நலம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நிலவுக்குச் செல்லும் பயணம் பற்றிய முக்கியக் குறிப்புகளை விஞ்ஞானிகள் கூறிக்கொண்டிருந்தனர்.

பின்னர் நிலவுக்குச் செல்லும் நாளும் வந்தது. செல்வாவும் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தார். ஆனால் செல்வா வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால் ஏவுதளம் செல்லும் வாகனம் செல்வாவை மட்டும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

சிறிது நேரம் கழித்து அவரது நண்பருக்குப் போன் செய்து செல்வா சொன்னதைக் கேட்டுவிட்டு அவரது ஊரே செல்வாவைப் பார்த்துச் சிரித்துகொண்டிருந்தது.

அப்படி அவர் என்னதான் சொன்னார்?

அவர் சொன்னது “ மச்சி, ஜன்னலோரமா ஒரு சீட் போட்டு வைடா, புளிச்சோறு கட்டிட்டு வந்திடறேன்! “ சீக்கிரமா வந்திடரேன்! 

Saturday, July 9, 2011

செல்வாவின் அறிவுத்திறன்!

செல்வாவும் அவரது நண்பரும் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்தார்கள்.

செல்வாவின் அறிவாளித்தனத்தைச்(!?) சமாளித்து அவருடன் இருப்பதற்கு அவரது நண்பர் மிக மிகச் சிரமப்படவேண்டியிருந்ததது.

இப்படித்தான் ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். நல்ல உறக்கத்திலிருந்த அவரது நண்பருக்கு யாரோ “ புஸ் புஸ்” என்று ஊதுவது போல சத்தம் கேட்டது. விழித்துப்பார்த்தவருக்கு ஆச்சர்யம்.

பக்கத்தில் செல்வா ஒரு சைக்கிள் பம்பினை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அதன் காற்றுக் குழாயில் வாயை வைத்து ஊதிக்கொண்டிருந்தார்.

அவரது நண்பருக்கு குழப்பத்திற்கு மேல் குழப்பம். அதுவும் இல்லாமல் அவர்களிடம் இது போன்ற பம்ப் ஏதும் இல்லை.

“ டேய், எதுக்குடா இப்ப இந்த பம்பல வாய வச்சு ஊதிட்டு இருக்க?” என்றார்.

“சத்தமா பேசாதடா, இது எதிர்த்த வீட்டுக்காரங்க பம்பு, நானே அவுங்களுக்குத் தெரியாம ஊதிட்டு இருக்கேன்! “ என்று மெதுவான குரலில் சொன்னார் செல்வா.

” சரி மெதுவாவே சொல்லு , இப்ப எதுக்கு இப்பிடி ஊதிட்டு இருக்க ?”

” காலைல நம்ம சைக்கிளுக்கு இந்த பம்ப்ல இருந்துதானே காத்து அடிச்சோம் , அதான் பம்புக்குள்ள இருக்குற எல்லா காத்தும் நாமலே எடுத்துட்டோம்ல. நாளைக்கு அவுங்க செக் பண்ணும்போது காத்து இல்லைனு நம்ம கிட்ட காசு கேட்டா என்ன பண்ணுறது? அதான் இப்பவே அவுங்களுக்குத் தெரியாம ஊதி வச்சிட்டா பிரச்சினை வராதுல! எப்டி ஐடியா?” என்று குசுகுசுவெனச் சொன்னார் செல்வா.

Friday, July 8, 2011

இதுவும் சரிதானே?

”ஏன்டா உங்கிட்ட ஒரு வேலையக் கொடுத்தா உருப்படியா பண்ணமாட்டியா?“ என்று திட்டியவாரே செல்வாவின் அறைக்குள் நுழைந்தார் அவரது தாயார்.

“ஏன் மா ?”

“உப்பு வாங்கிட்டு வரச்சொன்னா இதென்ன அழுக்கு உப்ப வாங்கிட்டு வந்திருக்க? இத வச்சு என்ன பண்ணுறது?”

“அது, அது, அது வந்து வாங்கிட்டு வரும்போது கீழ கொட்டிருச்சு, அதான் அப்படி அழுக்காகிருச்சு!” என்று பயந்தவாரே சொன்னார் செல்வா.

”இத்தன உப்பும் வேஸ்ட். கண்ணாடி காகிதத்துலதான போட்டு கொடுத்திருப்பாங்க, அது எப்படி கீழ கொட்டுச்சு?”

“அஞ்சு காலி கவர் கொடுத்தா ஒரு பாக்கட் உப்பு இலவசம்னு சொன்னாங்க, அதான் அஞ்சு பாக்கட் வாங்கி அதுல இருந்து உப்ப எல்லாத்தயும் கீழ கொட்டிட்டு அந்த காலி பாக்கட்ட கொடுத்து ஒரு பாக்கட் உப்பு இலவசமா வாங்கிட்டேன்! அதான் இப்டி அழுக்காகிருச்சுனு நினைக்கிறேன் மா! “

“இலவசப் பொருள வாங்குறதுக்கு இப்படி எல்லாம் பண்ணனுமா? இப்ப பாரு எல்லாமே வெட்டியாப் போச்சு!” என்று தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் உப்பு வாங்குவதற்காக கடைக்குச்சென்றார் அவரது தாயார்.

கடைக்குச் சென்று திரும்பிய அவரது தாயாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

செல்வா அவர் வாங்கி வந்திருந்த உப்பினை ஒரு பக்கட்டில் தண்ணீர் ஊற்றி அதற்குள் கொட்டிவைத்திருந்தார்.

“இது எதுக்குடா இப்ப பக்கட்ல தண்ணி ஊத்தி வச்சுருக்க? “ 

“அதான் உப்பு அழுக்காகிப்போச்சுல. அத வாசிங்பவுடர் போட்டு அலாசிட்டோம்னா அழுக்கு போய்டும்ல அதான் பக்கட்ல ஊற வச்சிருக்கேன்” என்றார்.

Wednesday, July 6, 2011

தண்ணீரில் நனைந்த மீன்!


இது செல்வாவின் குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த சம்பவம்.

அன்று செல்வா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் வந்த ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டு பயந்தவர் வீட்டின் மூலையில் ஒரு கோணிப்பைக்கு அடியில் போய் ஒளிந்துகொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வந்த அவரது தாயார் செல்வாவைக் காணாததால் தவித்துப்போய் சத்தமாகக் கத்திக் கூப்பிடத்தொடங்கினார். ஆனால் செல்வா வாயைத் திறக்கவே இல்லை.

சிறிது நேரம் கத்திய அவரது தாயார் "எங்க போய்த் தொலைஞ்சான்னு தெரிலையே?" என்று சலித்தவாறே வீட்டிற்குள் சென்றார்.

அங்கே ஒரு கோணிப்பையில் " இந்தக் கோணிப்பைக்குள் ஒன்றும் இல்லை!" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தவர் அந்த கோணிப்பையை தூக்கினார்.

கோணிப்பையில் ஒளிந்திருந்த செல்வாவைப் பார்த்த அவரது தாயார் " இங்க ஏண்டா ஒளிஞ்சிட்டு இருக்க ? அந்தக் கத்துக் கத்தி கூப்பிட்டேன் வயத்தொறந்து சொல்லுறதுக்கு என்ன ? " என்றார் கோபமாக.

" என்னைய போலீஸ் பிடிக்க போகுது, அதான் ஒளிஞ்சிக்கிட்டேன்!" என்றார் செல்வா. இதைச்சொல்லும்போதே கை கால்களெல்லாம் தனித்தனியாக நடுங்கிக்கொண்டிருந்தது.

" எதுக்கு போலீஸ் பிடிக்குது ? " 

" டிவில ஒரு படத்துல ஒரு ஆளு இன்னொருத்தன தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு கொன்னுட்டான், அவன போலீஸ் பிடிச்சிட்டு போச்சு. அப்படின்னா என்னையும் பிடிக்கும்ல" என்றார் செல்வா.

" உன்ன எதுக்குடா பிடிக்குது?" குழப்பமாகக் கேட்டார் அவரது தாயார்.

" நேத்திக்கு அப்பா ஒரு மீன் வாங்கிட்டு வந்தார்ல, அத கொண்டுபோய் நான் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டேன்! அப்படின்னா என்னையும் போலீஸ் பிடிக்கும்ல!" என்று அழ ஆரம்பித்தார்.

Saturday, July 2, 2011

இலவச நிமிடங்கள்!


செல்வா புதிதாக போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்பொன்று வாங்கியிருந்தார்.

செல்வா அவ்வளவு எளிதாக எந்த செலவும் செய்துவிடமாட்டார். அப்படியே செலவு செய்தாலும் ஏதேனும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்.

அவரின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த செல்போன் இணைப்பு அமைந்திருந்தது. 

ஒரு மாதத்திற்கு 1440 நிமிடங்கள் இலவசம் என்ற அவர்களின் திட்டம் செல்வாவை வெகுவாகக் கவர்ந்ததால் உடனடியாக அந்த நிறுவனத்தில் புதிய இணைப்பொன்றை வாங்கினார்.

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. செல்வாவின் மனதில் குடியேறியிருந்த சந்தேகம் வலுவடையத் தொடங்கியது.

இனியும் தாமதித்தால் தான் ஏமாற்றப்படுவோமோ என்ற பயத்தில் தனது நண்பனை அழைத்து " மச்சி ஒரு மாசத்துக்கு எத்தன நாளு ?" என்று கேட்டார்.

" நாலாம் தேதி ஒரு நாலு வரும் , அப்புறம் பதினாலாம் தேதி ஒரு நாலு வரும், அப்புறம் இருபத்தினாலம் தேதி ஒன்னு ஆக மொத்தம் ஒரு மாசத்துக்கு மூணு நாலு! " என்று சொன்னார் அவரது நண்பர்.

எரிச்சலடைந்த செல்வா " ஐயோ நான் கேட்டது நாள் (DAY ) , நம்பர் இல்ல! " என்றார்.

" அது மாசத்தப் பொறுத்து வரும்! " 

" சரி இந்த மாசத்துக்கு எத்தன நாளு ? "

" இது ஜூலை மாசம் , இந்த மாசத்துக்கு 31 நாள் வரும்! " என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார் அந்த நண்பர்.

உடனடியாக அந்த செல்போன் கம்பனிக்கு அழைத்த செல்வா " மேடம் இந்த மாசத்துக்கு எத்தன நாள் ? " என்றார்.

" உங்களுக்கான டீடைல் தான் செக் பண்ணிட்டு இருக்கேன் சார் , உங்க பேர் சொல்லுங்க! " என்றார்.

" இந்த மாசத்துக்கு எத்தன நாளுன்னு கேட்டா கூட செக் பண்ணி சொல்லுறேன்னு சொல்லுறாங்க, கொடுமைடா!" என்று மனதில் நினைத்துகொண்டு தனது பெயரைக் கூறினார்.

" சார் இந்த மாசத்துக்கு எத்தன நாள் நீங்க பேசிருக்கீங்கனு தகவல் வேணுமா?" என்றார் அந்த அதிகாரி.

" அதில்லைங்க , இந்த மாசம் ஜூலைக்கு மொத்தம் எத்தன நாள் ? " என்று தெளிவாகக் கேட்டார் செல்வா.

" இந்த டீடைல் இங்க கிடைக்காது சார் , இருந்தாலும் சொல்லுறேன் 31 நாள்! " என்றார்.

செல்வாவிற்கு தூக்கிவாரிப்போட்டது, மேலும் தான் ஏமாந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக அந்த அதிகாரியிடம் " அப்படின்னா எனக்கு தரவேண்டிய அந்த ஒருநாள எப்படி தருவீங்க ? " என்றார்.

" உங்களுக்குத் தரவேண்டிய ஒருநாளா? என்ன சொல்லுறீங்க ?" என்றார் அந்த அதிகாரி.

" கனெக்சன் தரும்போது அவ்ளோ அருமையா பேசுறீங்க, இப்ப மட்டும் மறந்திருவீங்களா ? என்னோட பிளான் படி எனக்கு 1440 நிமிஷம் இலவசம்னு சொன்னீங்கள்ல, 1440 நிமிசம்னா ஒரு நாள் , அந்த நாள எனக்கு எப்படி தரப்போறீங்க? அப்புறம் இலவசமா தர்ற நாளுக்கு(கிழமை) என்ன பேரு வைக்கப் போறீங்க ? அப்படின்னா என்னோட மாசத்துக்கு 32 நாள் வரணும்ல?" என்றார்.

செல்வாவின் இந்தக் கேள்வியால் கதிகலங்கிப்போன அந்த அதிகாரி உடனடியாக இணைப்பைத் துண்டித்தார்!