Wednesday, June 29, 2011

எதை விதைக்கிறீர்கள்?


செல்வாவின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்திருந்தார்.

வழக்கமான உபசரிப்புகள் முடிந்ததும் குடும்ப விசயங்களைப் பேசத்தொடங்கினர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த உறவினர் தங்கள் தோட்டத்தில் மிளகாய் நல்ல மகசூல் கொடுத்திருப்பதாகவும் அதை விற்பதற்கு ஏதேனும் வழி சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.

" நிச்சயமாக உதவுகிறோம்" என்று செல்வாவின் தந்தை உறுதியளித்தார்.

உள்ளூரில் இருந்த சிலரிடம் விசாரித்த செல்வாவின் தந்தை அனைவருமே வேகவைத்த மிளகாயே விரும்புவதைத் தெரிந்துகொண்டார்.

அடுத்தவாரம் வீட்டிற்கு வந்த அவரது உறவினரிடம் பச்சை மிளகாயை அதிக அளவில் யாரும் விரும்பமாட்டார்கள் என்றும் வேகவைத்துக் காயவைத்த மிளகாயையே அனைவரும் விரும்புகின்றனர் என்பதையும் எடுத்துக்கூறினார்.

இதைக்கேட்ட உறவினர் தங்கள் தோட்டத்தில் அதிக அளவு மிளகாய் விளைவதாகவும் ஒரே நேரத்தில் வேகவைப்பது சிரமம் என்றும் கவலைப்பட்டார்.

இதனை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த நமது செல்வாவிற்கு " என்ன விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்" என்ற பொன்மொழி ஞாபகம் வந்தது.

உடனடியாக அந்த உறவினரிடம் ஓடிய செல்வா " மாமா , உங்களுக்கு மிளகாய வேகவைக்கிறதுக்கு சிரமமா இருந்தா அத விதைக்கறதுக்கு முன்னமே அந்த விதைய வேகவச்சுடுங்க. வேக வச்ச விதைல இருந்து வேக வச்ச மிளகாய்தானே வரும்! " என்றார்.

Wednesday, June 22, 2011

இனி பெட்ரோலே தேவையில்லை!


தனது நீண்ட ஆராய்ச்சியின் பயனாக செல்வா பெட்ரோல் இல்லாமல்  மின்சாரத்தால் இயங்கும் வண்டியைக் கண்டுபிடித்தேவிட்டார்.

இதுவரை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் செல்வாவின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருந்தன. பெட்ரோல் இல்லாமல் ஓடுகின்ற வண்டியைக் கண்டுபிடிப்பதென்பது சாதாரண விசயமல்லவே!

உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் செல்வாவின் பெட்ரோல் இல்லாமல் ஓடும் வாகனத்தைப் பார்க்க ஆவலுடன் வந்துகொண்டிருந்தனர்.

செல்வா தனது வாகனத்தினைப் பார்வைக்கு வைத்திருந்தார். அது இயங்குவதற்கு பெட்ரோல் எதுவும் தேவைப்படாது என்றும் மின்சாரம் மட்டுமே போதுமானது என்றும் விளக்கிகொண்டிருந்தார்.

ஊர்ப்பொது மக்களும் ஆராய்ச்சியாளர்களும் செல்வாவின் வாகனத்தை அதிசயமாகப் பார்த்துகொண்டிருந்தனர்.

அப்பொழுது இது எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியாளர் செல்வாவிடம் கேட்டார்.

" இது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடியது , இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் அனைத்து வாகனங்களும் சிறிது நேரத்திற்கே மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடியது. ஆனா என்னோட இந்த வாகனம் நீண்ட நேரத்திற்கு இயங்கும். அதனால எங்க போறதுனாலும் நீங்க இத நம்பி போலாம்! " என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகச் சொன்னார் செல்வா.

" அதுக்கு எவ்ளோ நேரம் சார்ஜ் போடணும் ? " என்றார் மற்றொருவர்.

" சார்ஜ் போட வேண்டியதில்லை , நம்ம வண்டிக்குப் பக்கத்துல இன்னொரு வண்டி இருக்கு பாருங்க அதுல ஒரு ஜெனரேட்டர் இருக்கும் அதுல இருந்துதான் இதுக்கான கரண்ட் வருது! "

" அப்ப அதுக்கு பெட்ரோல் ஊத்தனும்ல ?"

" கண்டிப்பா அதுக்கு ஊத்தித்தான் ஆகணும்! "

" அப்புறம் இது என்ன பெரிய கண்டுபிடிப்பு, நமக்கு அதிகமா செலவுதானே ஆகுது ?" என்று குழப்பமாகக் கேட்டார் அந்த நபர்.

" இந்த வண்டிய மட்டும் நீங்க வச்சிட்டு , அந்த வண்டிய வேற ஒருத்தருக்கு வித்திடுங்க , இப்ப நீங்க அதுக்கு பெட்ரோல் ஊத்த வேண்டாம்ல! " என்று தனது அறிவாளித்தனத்தை நிலைநாட்டினார் செல்வா.





Tuesday, June 21, 2011

ரயில்வேயும் செல்வாவும்!


இது செல்வா ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.

செல்வா ரயில்வே அதிகாரியாகப் பொறுப்பேற்று ஒரு நிலையத்தின் நிலைய அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார்.

புதிய சிந்தனையுடைய நமது செல்வா அநேக மாறுதல்களைக் கொண்டுவந்தார். சில நாட்களிலேயே மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும் உயரதிகாரிகளும் செல்வாவைப் பாராட்டத் தொடங்கினர்.

ஆனால் இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் "EMERGENCY EXIT " என்று எழுதப்பட்ட இடத்தில் ஒரு மாறுதல் கொண்டுவரும் வரையே நீடித்தது.

ஒருநாள் "EMERGENCY EXIT" என்ற இடத்தில் கம்பிகள் பொருத்தப்பட்ட ஜன்னலைக் கொண்டு அடைத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த உயரதிகாரி ஒருவர் எதற்காக இதனை அடைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

" சார் , எமர்ஜென்சி எக்சிட் அப்படிங்கிறது எதாச்சும் பிரச்சினைனா தானே வேணும் , எல்லா நேரத்திலும் எதுக்கு இருக்கணும் ? அதான் அடைக்கிறேன்! எப்பவாச்சும் எதாச்சும் பிரச்சினைனா நாம அந்த நேரத்துல இந்த ஜன்னல எடுத்திட்டு பழையபடி ஓட்டையா மாத்திடலாம்ல! " என்று தனது திட்டத்தைச் சொன்னார் செல்வா.

சற்றே அதிர்ச்சியாக செல்வாவைப் பார்த்த அந்த அதிகாரி செல்வா போன்ற அறிவாளிகளை வெறும் ரயில்வே துறையில் வைத்து அவரது அறிவினை வீணாக்க விரும்பாமல் உடனடியாக அவரை வேலையில் இருந்து நீக்கினார்.

Thursday, June 16, 2011

தமிழ் தெரியாதுனா சொல்லவேண்டியதுதானே!


ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் சுற்றுலா செல்லலாமெனத் திட்டமிட்டிருந்தனர்.

சுற்றுலா செல்லலாம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்த நாளில் செல்வாவின் நண்பர் செல்வாவின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

நீண்ட நேரம் கழித்து வந்த செல்வாவிடம் " ஏன்டா இவ்ளோ நேரம் ? ஒரு மனுஷன் எவ்ளோ நேரம்தான் வெயிட் பண்ணுறது ? "

" எங்க வீட்டுல இருந்து இங்க வரதுக்கு ஒரே ஒரு பஸ் தான் இருக்கு , அதுவும் போயிருச்சு! அதான் நடந்தே வரேன்! அதனால லேட் ஆகிருச்சு " என்றார் செல்வா.

" எரும , வர்ற வழில டூ வீலர்ல வர்ற யாரச்சும்கிட்ட லிப்ட் கேட்டு வரலாம்ல! "

" லிப்டுனா பெரிய கட்டடத்துல கீழ இருந்து மேல போறதுக்கு வச்சிருப்பாங்களே அதுதானே ? டூ வீலர்ல எப்படி அவ்ளோ பெரிய லிப்ட்ட எடுத்துட்டு வர முடியும்?" என்று தனது அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினார்.

இதற்குமேல் பேசினால் வீண் விவாதங்கள் வரலாம் என்று மேற்கொண்டு பேசாமல் தாங்கள் ஏற்கெனவே பேசிவைத்திருந்த சுற்றுலாத் தளத்திற்கு விரைந்தனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் செல்வாவின் நண்பர் செல்வாவை தனியாக விட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த அவரது நண்பர் செல்வாவும் வேறொருவரும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

" டேய் , ஏண்டா அவர் கூட சண்டை போடுற ? " 

" அவன் என்ன சொன்னான்னு நீயே கேளு ! "

அருகில் இருந்த நபரிடம் " என்ன பிரச்சினைங்க ?" என்றார் செல்வாவின் நண்பர்.

இவர் என்ன கேட்டார் என்று புரியாத அந்த நபர் " I DON'T KNOW TAMIL " என்றார்.

செல்வாவிடம் திரும்பிய அவரது நண்பர் " டேய் லூசு , அவருக்கு தமிழ் தெரியாதாம்ல , அப்புறம் எதுக்கு அவர் கூட சண்டை போட்டுட்டு இருக்க ?"

" தமிழ் தெரியலைனா தமிழ் தெரியாதுன்னு சொல்லவேண்டியதுதானே ?! " என்று கோபமாகக் கேட்டார் செல்வா.

" தமிழ் தெரியாதுன்னு தான சொல்லுறாரு ? "

" தமிழ் தெரியாதுன்னு தமிழ்ல சொல்லவேண்டியதுதானே !? அப்பத்தான எனக்கு புரியும்! " என்ற செல்வாவைப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டு " வா போலாம்! " என்று அழைத்துச்சென்றார்.

Thursday, June 9, 2011

செல்வாவின் வித்தியாசமான சிந்தனை!


செல்வா ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். செல்வாவின் திறமை கண்டு வியந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் செல்வாவிடம் ஒரு பொருளை விளம்பரப்படுத்த வித்தியாசமாக முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

செல்வாவும் அந்தப் பொருளினைப் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொண்டு தனது அறைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்பொழுது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் சிறு பிரச்சினை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய கடைக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் துணைக்கு வரும்படியும் செல்வாவை அழைத்தார்.

" என்ன பிரச்சினை ? " என்றார் செல்வா.

" யாராச்சும் SMS அனுப்பினா அரை மணிநேரம் கழிச்சுதான் எனக்கு வருது  , அதான் என்னனு பாக்கணும்" என்றார் நண்பர்.

" இதுக்கு ஏன் கடைல கொடுக்குறீங்க ? , உங்களுக்கு SMS அனுப்புறவர்கிட்ட அரை மணிநேரம் முன்னாடியே அனுப்ப சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சதுல! " என்றார்.

இதற்குப் பிறகு அந்த நண்பர் எதுவும் சொல்லமால் செல்வாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வா அந்த விளம்பரத்திற்குத் தேவையான ஒரு வித்தியாசமான கற்பனையை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு மேலாளரிடம் சென்றார்.

செல்வாவின் கற்பனையைப் படித்துப்பார்த்த அவரது மேலாளர் தனது வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். அப்படி என்னதான் செல்வா வித்தியாசமாக எழுதித் தொலைத்தார் ? செல்வா எழுதிய வித்தியாசமான கற்பனை இதோ!


                                        ****** போன் விளம்பரம்!

*.எங்கள் போன் விலை மற்ற போன் விலைகளைக் காட்டிலும் மிகக் குறைவு , மற்ற போன்களின் விலை 4000 என்றால் எங்கள் போன்களின் விலை வெறும் 6000 மட்டுமே!

*.எங்கள் போன்கள் மிகமிக வலிமையானவை. எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் உடனே உடைந்து போகக்கூடியவை!


*.மிகச்சிறந்த பேட்டரி வாழ்நாளை உடையவை. ஒருநாளைக்கு 24 மணிநேரம் சார்ஜ் செய்தாலே 10 நிமிடம் வரை பேட்டரி சார்ஜ் நிக்கக்கூடியது!



Friday, June 3, 2011

சரியான எடை!


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செல்வா வீட்டில் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.  

சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது தாயார் சிறிது நேரம் கழித்து செல்வாவை அழைத்து கேஸ் தீர்ந்துவிட்டதாகவும் , அருகில் இருக்கும் பாரத் கேஸ் விற்பனையகத்திற்குச் சென்று வாங்கிவருமாறும் கூறினார். மேலும் கேஸின் எடை அளவினை சோதனை செய்து வாங்கிவருமாறும் கூறினார்.

செல்வாவும் காலியான கேஸ் ட்ரம்முடன்  விற்பனையகத்திற்குச் சென்றார். சிறிது நேர காத்திருப்பிற்குப் பின்னர் அவருக்கு புதிய கேஸ் ட்ரம் கிடைத்தது. அதன் எடையை சோதனை செய்யவேண்டும் என்று கூறிய செல்வா அங்கிருந்த எடைக்கல்லின் மீது வைத்து எடயினைச் சரிபார்த்தார்.

நிரப்பப்பட்ட ட்ரம்மின் எடை 29.4 KG எடை வந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்த செல்வா காலி ட்ரம்மின் எடை 15.2 KG எனவும் அதில் நிரப்பப்பட்டுள்ள கேஸின் எடை 14.2 KG எனவும் அறிந்தார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த செல்வாவிடம் அவரது தாயார் 

" இங்க இருக்கிற கேஸ் எடுத்துட்டு வரதுக்கு இவ்ளோ நேரமாடா ? " என்றார்.

அதற்கு செல்வா " இல்லமா , நீ எடை செக் பண்ணி வாங்கிட்டு வரச்சொன்னதால முதல்ல மொத்தமா எடைபோட்டேன் , அப்புறம் ட்ரம் எவ்ளோ எடைன்னு தெரிஞ்சிக்க உள்ள இருக்குற கேஸ் எல்லாத்தையும் பிடுங்கிவிட்டுட்டு மறுபடியும் எடை போட்டேனா அதான் லேட் ஆகிருச்சு! " என்றார்.