இது செல்வாவின் பள்ளிக்காலத்தில் நடந்த சம்பவம்.
அப்பொழுது செல்வா பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்தார்.
அன்று அவரது தமிழாசிரியர் " பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்! " என்ற நீதியை விளக்கும்படி நீதிக்கதை எழுதுமாறு கூறி இருந்தார்.
வகுப்பில் உள்ள அனைவரும் தனித்தனியாக அமர்ந்து தத்தமது கதைகளை எழுதத் தொடங்கினர்.
செல்வாவும் எவ்வளவோ யோசனை செய்தும் அவரால் கதை எழுத முடியவில்லை. இருந்தபோதிலும் எழுதுவது போல பாசாங்கு செய்துகொண்டிருந்தார்.
சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த செல்வா பின்னர் தனக்கு முன்னாள் அமர்ந்திருந்த மாணவரிடம் அவர் எழுதிய கதையைக் காட்டுமாறு கூறினார். ஆனால் அவர் காட்ட முடியாது என்று கூறியதோடு ஆசிரியரிடமும் போட்டுக்கொடுத்தார்.
" படிச்சு எழுதுறதுல தான் ஒழுங்கா எழுத மாட்டிங்கிற, இது கதைதானே , இதையுமா பார்த்து எழுதுவ ? " என்றார் ஆசிரியர் கோபமாக.
" சார் , நான் ஒன்னும் பாத்து எழுதுறதுக்காக அவன் கிட்ட கேக்கல , போன தடவ கணக்குப் பரிட்சைல நாங்க ரண்டுபேரும் 15*15 = 255 னு எழுதினதுக்கு கணக்கு வாத்தியார் ஏண்டா பார்த்து எழுதினணு திட்டினார் , ஆனா மத்தவங்க எல்லோருமே 15*15= 225 னு எழுதிருந்தாங்க, அவுங்கள திட்டல! அதான் இந்த தடவையும் அவன் எழுதின கதையவே நானும் எழுதிட்டா என்ன திட்டுவீங்கனுதான் , அவன் எழுதினத பார்த்துட்டு அது மாதிரி இல்லாம வேற எழுதலாம்னு கேட்டேன்! " என்றார் செல்வா.
" உனக்கு என்ன வருதோ அத எழுது ! இனிமேல் திரும்பி பார்க்குறத பார்த்தேன்னா அப்புறம் நடக்குறதே வேற ! " என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார் ஆசிரியர்.
செல்வாவிற்கு இருந்த ஒரு நம்பிக்கையும் வீணாய்ப் போனது. மற்ற மாணவர்கள் சிலர் இன்னமும் வேக வேகமாக எழுதுவதும் , சிலர் எழுதி முடித்துவிட்டு கிளம்புவதுமாக இருந்தனர். செல்வாவும் தேர்வு நேரம் முடியும் வரையிலும் முயற்சித்துப் பார்த்தார். அவருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. இறுதியாக ஒரு வரி மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்.
அன்று மதியம் ஆசிரியர் அனைவரின் கதைகளையும் படித்துக்கொண்டிருந்தார். செல்வாவின் பேப்பரைப் பார்த்தவருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. இப்படியும் ஒரு மாணவனா என்று வியந்தவர் செல்வாவை அழைத்து " நீ என்ன கதை எழுதி வச்சிருக்க ? " என்றார்.
" இல்ல சார் , நீங்க தானே அவுங்க அவுங்க வேலைய அவுங்க அவுங்கதான் செஞ்சிக்கணும்னு , அதான்! " என்றார் சற்று பயந்தவாறே.
செல்வா எழுதி இருந்த கதை இதுதான் " பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் - நீதிக்கதை என்று தலைப்பிட்டு இது நீதிக்கதை என்பதால் இதற்கான தீர்ப்பினை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் , மேலும் இது நீதிக்கதை என்பதால் இதற்கான நீதியினை ஒரு நீதிபதி வழங்குவார்! "